
புதுடெல்லி:இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய திடீர் தாக்குதலை அடுத்து கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதியிலிருந்து டெல் அவிவ் நகருக்கு ஏர் இந்தியா தனது விமான சேவையை நிறுத்தியது. 5 மாத இடைவெளிக்குப் பிறகு கடந்த மார்ச் 3-ம் தேதி டெல் அவிவ் நகருக்கு ஏர் இந்தியா மீண்டும் விமான சேவையைத் தொடங்கியது.
ஈரானில் ஹமாஸ் தலைவர் கொல்லப்பட்ட விவகாரத்தில் இதுவரை இஸ்ரேல் பொறுப்பேற்கவில்லை என்றபோதும், அந்த நாட்டிற்கான விமான சேவைகளைப் பல நிறுவனங்கள் ரத்துசெய்யத் தொடங்கியுள்ளன.
இதற்கிடையே, இந்தியாவிலிருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்குச் செல்லும் விமானங்கள் மற்றும் டெல் அவிவ் நகரிலிருந்து இந்தியாவிற்கு வரும் விமானங்கள் அனைத்தும் ஆகஸ்ட் 8-ம் தேதிவரை ரத்து செய்யப்படுகிறது என ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்தது.
இந்நிலையில், இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்குச் செல்லும் விமானங்கள் மற்றும் டெல் அவிவ் நகரிலிருந்து இந்தியாவிற்கு வரும் விமானங்கள் அனைத்தும் மறு அறிவிப்பு வரும் வரை ரத்து செய்யப்படுகிறது என ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக ஏர் இந்தியா நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், மத்திய கிழக்கின் சில பகுதிகளில் நிலவும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு டெல் அவிவுக்குச் செல்லும் மற்றும் அங்கிருந்து வரும் எங்கள் விமானங்களின் திட்டமிடப்பட்ட பயணம் மறு அறிவிப்பு வரும் வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. நிலைமையைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் எனத் தெரிவித்துள்ளார்.


