Contempt Case: சிறை தண்டனைக்கும் தடை.. தோனி பதிலளிக்க உத்தரவு!

Advertisements

தோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கில் ஐ.பி.எஸ். அதிகாரி சம்பத் குமாருக்கு 15 நாட்கள் சிறை தண்டனை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

புதுடெல்லி: கடந்த 2013 ம் ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் சூதாட்டம் குறித்து விசாரணை நடத்திய ஐ.பி.எஸ். அதிகாரி சம்பத்குமார் வெளியிட்ட அறிக்கையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி சூதாட்டத்தில் ஈடுபட்டதாகக் குறிப்பிட்டிருந்தார்.

அதனடிப்படையில் தனியார் தொலைக்காட்சி நடத்திய விவாத நிகழ்ச்சி, தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதாகக் கூறி 100 கோடி ரூபாய் மான நஷ்டஈடு கோரி கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி 2014-ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். தனியார் தொலைக்காட்சி, அதன் ஆசிரியர், போலீஸ் அதிகாரி சம்பத்குமார் ஆகியோர் எதிர் மனுதாரர்களாக சேர்க்கப்பட்டிருந்தனர்.

இந்த வழக்கில் ஐ.பி.எஸ். அதிகாரி சம்பத்குமார் பதில் மனு தாக்கல் செய்திருந்தார். உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற உத்தரவுகளைப் பதிவு செய்து இந்த பதில் மனுவை தாக்கல் செய்திருந்தார்.

அந்த பதில் மனுக்களில் உள்ள தகவல்கள் நீதிமன்றத்திற்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இருப்பதாகக் கூறி ஐ.பி.எஸ். அதிகாரி சம்பத்குமாருக்கு எதிராக கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் அவமதிப்பு செய்துள்ளதாகக் கூறி, அவருக்கு 15 நாட்கள் சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டது. அப்போது தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு செய்யவுள்ளதால் தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று சம்பத்குமார் தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. அதை ஏற்ற நீதிபதிகள், தண்டனையை 30 நாட்களுக்கு நிறுத்தி வைத்து உத்தரவிட்டனர்.

பின்னர் சம்பத் குமார் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இதனை விசாரித்த உச்சநீதிமன்றம் இந்த மனு தொடர்பாக எம்.எஸ். தோனி பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது. மேலும் சம்பத் குமாருக்கு விதிக்கப்பட்ட 15 நாட்கள் சிறை தண்டனைக்கும் தடை விதித்துள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *