
மதுரை, திண்டுக்கல் தொகுதிகளில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் வேட்பாளர்கள் அறிவிப்பு.
சென்னை, நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழ்நாட்டில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் தொகுதி பங்கீடு உறுதியாகியுள்ளது. தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் 10 தொகுதிகள், இந்திய கம்யூனிஸ்டு 2 தொகுதிகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு 2 தொகுதிகள், விடுதலை சிறுத்தைகள் 2 தொகுதிகள், ம.தி.மு.க. 1 தொகுதி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 1 தொகுதி, கொங்கு மக்கள் தேசிய கட்சி 1 தொகுதியிலும் போட்டியிட உள்ளன. எஞ்சிய 21 தொகுதிகளில் தி.மு.க. போட்டியிட உள்ளது.
இதையடுத்து மதுரை, திண்டுக்கல் ஆகிய இரு தொகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுக் கட்சி போட்டியிட உள்ளதாக அக்கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கடந்த 2 தினங்களுக்கு முன் அறிவித்தார். இதையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 2 தொகுதிகளுக்கான வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் பணி தீவிரமாக நடந்து வந்தது.
இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர்களை அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அறிவித்துள்ளார். அதன்படி, திண்டுக்கல் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலாளர் சச்சிதானந்தம், மதுரை தொகுதியில் சு.வெங்கடேசன் எம்.பி. போட்டியிடுகின்றனர்.

