Advertisements

செயற்கை நுண்ணறிவு வீடியோக்களுக்குத் தமிழ் வளர்ச்சித்துறையின் தணிக்கை கட்டாயம் இருக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அறிவித்துள்ளார்.
கோவை வ.உ.சி மைதானத்தில் அமைக்கப்பட்ட பிரம்மாண்ட அரசுப் பொருட்காட்சியை அமைச்சர்கள் ராஜ்மோகன், சம்பத்குமார் ஆகியோர் இணைந்து திறந்து வைத்தனர். விழாவில், பல்வேறு தரப்பைச் சேர்ந்த பயனாளிகளுக்கு 4 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள், இ-பட்டாக்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களை வழங்கினர்.
பின்னர், அமைச்சர் ராஜ்மோகன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, சிங்கப்பெண் திட்டத்திற்காக வெளியிடப்பட்ட செயற்கை நுண்ணறிவு வீடியோக்களில் ஏற்பட்ட பிழைகள் தொழில்நுட்பக் கோளாறு என விளக்கமளித்தார். இனிவரும் காலங்களில், செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்படும் காணொளிகள், வரைபடங்கள் மற்றும் ஆடியோக்கள் எதுவாக இருந்தாலும், கட்டாயமாகத் தமிழ் வளர்ச்சித் துறையின் முறையான தணிக்கை மற்றும் ஆலோசனைக்குப் பிறகே வெளியிடப்பட வேண்டும் எனக் கூறினார்.
நிலுவையில் உள்ள தமிழ் வளர்ச்சித் துறை விருதுகள் அனைத்தும் முதலமைச்சரின் ஆலோசனையுடன் விரைவில் வழங்கப்படும் என்று தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், மூத்த தமிழறிஞர்கள் மற்றும் மாணவர்களிடம் அரசுப் பேருந்துப் பணியாளர்கள் கூடுதல் கனிவோடு நடந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
Advertisements




