
புதுடெல்லி: இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய திடீர் தாக்குதலை அடுத்து கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதியிலிருந்து டெல் அவிவ் நகருக்கு ஏர் இந்தியா தனது விமான சேவையை நிறுத்தியது. 5 மாத இடைவெளிக்குப் பிறகு கடந்த மார்ச் 3-ம் தேதி டெல் அவிவ் நகருக்கு ஏர் இந்தியா மீண்டும் விமான சேவையைத் தொடங்கி இருந்தது.
இந்நிலையில், இஸ்ரேல்-ஈரான் இடையில் போர் பதற்றம் நிலவி வரும் நிலையில், இந்தியாவிலிருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்குச் செல்லும் விமானங்கள் மற்றும் டெல் அவிவ் நகரிலிருந்து இந்தியாவிற்கு வரும் விமானங்கள் அனைத்தும் வரும் 30-ம் தேதிவரை ரத்து செய்யப்படுகிறது என ஏர் இந்தியா விமான நிறுவனம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக, ஏர் இந்தியா நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், மத்திய கிழக்கில் நிலவிவரும் சூழலைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அங்குள்ள நிலவரத்தைக் கண்காணித்து வருகிறோம் எனத் தெரிவித்துள்ளார்.
ஈரான், இஸ்ரேல் ஆகிய இரு நாடுகளுக்கும் இந்தியர்கள் யாரும் செல்லவேண்டாமென இந்திய வெளியுறவுத்துறை ஏற்கனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

