
அதிமுக சேலம் மாநகர் மாவட்ட செயலாளருக்கு எதிராக அதே கட்சியைச் சேர்ந்த சேலம் மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் பணமோசடியில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டி இருப்பது பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதிமுக சேலம் சேலம் மேற்கு ஒன்றிய கழகச் செயலாளராகப் பொறுப்பு வகித்தவர் ஏ.வி.ராஜூ. இவர் சேலம் மாநகர் மாவட்டச் செயலாளரான வெங்கடாசலம் மீது மோசடி புகாரை முன்வைத்துள்ளார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், சேலம் மாநகர் மாவட்டச் செயலாளரான வெங்கடாசலம் அரசு வேலை வாங்கி தருவதாகக் கூறி பணமோசடியில் ஈடுபட்டுள்ளதாகவும், அதிகளவில் சொத்துகளை வாங்கி குவித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் இது தொடர்பாகக் கட்சியின் பொதுச்செயலாளர் எப்பாடி பழனிசாமியிடமும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. திமுக அமைச்சர் பொன்முடி மீது அமலாக்கத்துறை நவடிக்கை எடுத்தது போன்று மாவட்டச் செயலாளர் வெங்கடாசலம் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சேலத்தில் 12 படுக்கை அறைகளைக் கொண்ட பிரமாண்ட வீடு வைத்துள்ளார்.
பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியிடம் கூட அப்படியொரு வீடு கிடையாது. அவர் எப்பொழுதும் எளிமையாக இருக்கக் கூடியவர். ஆனால், அவர் பெயரைக் கூறி வெங்கடாசலம் தொடர்ந்து மோசடியில் ஈடுபட்டு வருகிறார். அவரால் சேலத்தில் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் பேர். நான் தான் முதலில் வெளியில் சொல்லியுள்ளேன். இதன் பின்னர் ஒவ்வொருவராக வெளிவருவார்கள் என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “கழகத்தின் கொள்கை, குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் சட்ட திட்டடங்களுக்கு மாறுபட்டு, கழகத்தின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில், கழகக் கட்டுப்பாட்டை மீறிக் கழகத்திற்கும் களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், சேலம் மாநகர் மாவட்டத்தைச் சேர்ந்த ஏ.வி.ராஜூ இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்” என்று குறிப்பிட்டுள்ளார்.




