
சென்னை தீவுத்திடலைச் சுற்றி பார்முலா 4 கார் பந்தயம் நடத்த நிபந்தனைகளுடன் சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
தீவுத்திடலில் டிசம்பர் 9, 10 தேதிகளில் ஃபார்முலா 4 இந்தியன் சாம்பியன்ஷிப் மற்றும் இந்தியன் ரேசிங் லீக் நைட் ஸ்திரீட் பந்தயம் நடப்பதாக அறிவிக்கப்பட்டது. தமிழக அரசுடன் இணைந்து ரேசிங் புரமோஷன் நிறுவனம், இந்தப் பார்முலா 4 பந்தயத்துக்கு ஏற்பாடு செய்திருந்தது. ஆனால் மிக்ஜாம் புயல், வெள்ளம் போன்ற இயற்கைப் பேரிடர் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில் சென்னை தீவுத்திடலைச் சுற்றி நடக்கும் பார்முலா 4 கார் பந்தயத்திற்குத் தடை விதிக்க வேண்டும் எனச் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கு 13ம் தேதி நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது சபீக் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது,
‘’சென்னை தீவுத்திடலைச் சுற்றி பார்முலா 4 கார் பந்தயம் நடத்தப்படும். பந்தயம் நடத்த ராணுவம் மற்றும் கடற்படையிடம் தடையில்லா சான்று பெறப்பட்டுள்ளது. ஓமந்தூரார் மருத்துவமனையிலிருந்து பந்தய வழித்தடம் 100 மீட்டர் தூரத்தில் உள்ளதால், அந்த இடத்தைக் கடக்கும்போது ஒலி கட்டுப்பாடு கடைப்பிடிக்கப்படும்,” எனத் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து உயர்நீதிமன்ற நீதிபதிகள், “கார் பந்தயம் நடத்த அரசு ரூ.42 கோடி செலவு செய்வது தவறு என்றும் நீதிபதி தெரிவித்தார். இந்நிலையில் இந்த வழக்கு ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது, அப்போது பேசிய நீதிபதிகள், பொதுமக்கள், ராஜீவ்காந்தி மருத்துவமனை நோயாளிகள் பாதுகாப்புக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் அரசு வழங்கிய ரூ.42 கோடியைத் திருப்பித் தரப் பந்தயம் நடத்தும் தனியார் நிறுவனத்துக்கு உத்தரவிட்டது. அடுத்த 2 ஆண்டுகள் பந்தயம் நடத்த தமிழக அரசுக்கு ரூ.15 கோடி டிபாசிட் செய்ய வேண்டும் என்றும் பந்தயத்திற்கான முழு செலவையும் ‘Racing Promotions’ நிறுவனமே ஏற்க வேண்டும் எனவும் கூறினர்.

