
ஓடாத ஓட்டை எஞ்ஜின் திமுக ஆட்சி, தங்கள் கூட்டணியைப் பற்றி பேசுவதெல்லாம் வேடிக்கையின் உச்சம் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
பிரதமர் சொல்லும் டபுள் எஞ்சின் எனும் டப்பா எஞ்சின் தமிழ்நாட்டில் ஓடாது என்ற முதலமைச்சரின் கருத்துக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதில் அளித்தார். இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி தனது சமூக வலைத் தளப்பதிவில், தங்கள் கூட்டணியின் எழுச்சியை நேரலையில் மு.க.ஸ்டாலின் பார்த்து அலறிப் போய் விட்டார் என்றும் உடனே அவர் தனது சமூக வலைத்தளத்தில் புலம்பலை ஆரம்பித்துவிட்டார் என்றும் தெரிவித்தார்.
நான்கரை ஆண்டுகளாக ஒரு அடி கூட நகராத,ஒரு “ஓடாத ஓட்டை எஞ்ஜின் ஆட்சி”யை நடத்திவிட்டு, தங்கள் கூட்டணியைப் பற்றி பேசுவதெல்லாம் வேடிக்கையின் உச்சம் என்று விமர்சித்தார். மத்தியில் உள்ள தேசிய ஜனநாயக் கூட்டணி அரசும், தமிழகத்திற்கான நிதிகள், திட்டங்களை வாஞ்சையோடு வழங்கும் என்றார்.
மக்களின் பாதுகாப்பை சீர்குலைத்த விடியா ஆட்சியை விரட்டி அடிக்க வேண்டும் என்பது தான் தமிழக மக்களின் ஒருமித்த எண்ணம் என்றும் மக்களின் எண்ணத்தை ஈடேற்ற அமைந்ததே அதிமுக தலைமையிலான இந்த வெற்றிக் கூட்டணி என்று கூறினார்.



