
தேர்தல் வியூகங்களை வெளியே சொல்ல முடியாது என ஈபிஎஸ் கூறிய பதிலுக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை விளக்கம் அளித்துள்ளது. ஆங்கில நாளேடு ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்கே பாஜகவுடன் கூட்டணி வைத்திருப்பதாகக் கூறினார். அதிமுகவிற்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றால், கூட்டணி ஆட்சி அமைக்குமா என்று வினாவிற்கு, யூகத்தின் அடிப்படையிலான கேள்விக்கு பதில் அளிக்க முடியாது என்று கூறினார்.
பாஜக மற்றும் தவெகவை ஒப்பிட முடியாது என்று கூறியுள்ள ஈபிஎஸ், ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு வகையில் பலம் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். நாம் தமிழர் கட்சி, விடுதலை சிறுத்தைகள் மற்றும் இடதுசாரிகளை கூட்டணியில் சேர்த்துக் கொள்வீர்களா என்ற வினாவிற்கு, திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்று எண்ணம் கொண்ட அனைத்து கட்சிகளையும் வரவேற்பதாக பதில் அளித்துள்ளார்.இந்நிலையில், அதிமுகவுடன் கூட்டணி தொடர்பாக எவ்வித பேச்சுவார்த்தையும் இல்லை என்று தமிழக வெற்றிக் கழகம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.


