அதிமுக கூட்டணியில் இருந்து எஸ்டிபிஐ கட்சி விலகல் – பகிர் பின்னணி..!

பாஜக – அதிமுக கூட்டணி உருவாவது உறுதியாகியுள்ள நிலையில், அதிமுக கூட்டணியில் இருந்து எஸ்டிபிஐ கட்சி விலகியுள்ளது. கடந்த மக்களவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து எஸ்டிபிஐ கட்சி போட்டியிட்டது. எஸ்டிபிஐ மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் திண்டுக்கல் தொகுதியில் அதிமுக ஆதரவுடன் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். எஸ்டிபிஐ மாநாடுகளிலும் அதிமுகவினர் பங்கேற்றுப் பேசினர். திமுகவுக்கு எதிரான நிலைப்பாட்டில் தொடர்ந்து இருந்து வந்த எஸ்டிபிஐ கட்சி அதிமுகவுடன் இணக்கமாகவே இருந்தது.
இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தில்லிக்குச் சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்தார்.
தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் திமுகவை வீழ்த்துவதற்காக பாஜக – அதிமுக இடையே கூட்டணி ஏற்படுத்துவதற்காகவே அமித் ஷாவைப் பழனிச்சாமி சந்தித்தாகக் கூறப்படுகிறது. இது குறித்துப் பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துவதற்கே சென்னைக்கு அமித் ஷா வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. பாஜக – அதிமுக கூட்டணி அமைப்பது உறுதியாகியுள்ள நிலையில், அதிமுக கூட்டணியில் இருந்து எஸ்டிபிஐ விலகியுள்ளது.இதுவரை திமுகவுக்கு எதிரான நிலைப்பாடு கொண்டிருந்த எஸ்டிபிஐ கட்சி, தனது நிலைப்பாட்டைத் தளர்த்திக்கொண்டுள்ளது. அந்தக் கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் இன்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமையகத்துக்குச் சென்று, வக்புச் சட்டத்துக்கு எதிராகச் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியதற்காகவும், உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்படும் என்று கூறியதற்காகவும் திமுகவுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *