
சட்டமன்ற தேர்தல் மிக நெருங்கி வரும் சமயத்தில் இன்னும் மூன்று மாதங்களில் தேர்தல் கமிஷன் தனது அறிவிப்புகளை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே தமிழக அரசியல் களம் தற்பொழுது உச்சகட்ட சூழ்நிலையை எட்டி உள்ள நிலையில் பரபரப்பான பின்னணி பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.
முதல் கட்டமாக திமுகவிலிருந்து காங்கிரஸ் விலகி தமிழக வெற்றி கழகத்தில் இணைய போவதாக பேச்சுகள் உலா வந்தன . ஆனால் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்ட நிலையில், தற்பொழுது காங்கிரஸ் சார்பில் குழு அமைக்கப்பட்டிருக்கிறது இந்த குழுவினர் திமுக மேலிடத்தில் பேச இருக்கிறார்கள்.
இதற்கிடையே ஆட்சியில் பங்கு என முழக்கமிட்டு வந்த காங்கிரஸ் கட்சி தற்பொழுது பின்வாங்கி இருக்கிறது தங்களுக்கு ஆட்சியில் பங்கு தேவையில்லை. அதேசமயம் தமிழக தேர்தலில் 35 தொகுதிகள் ஒதுக்கி தர வேண்டும் என்ற கோரிக்கை வைக்க காத்திருக்கிறார்கள். கடந்த தேர்தலில் காங்கிரஸ் 25 தொகுதிகளில் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.
திமுகவிற்கும் காங்கிரசுக்கும் இழுபரியான பேச்சு முடிவில் அனேகமாக 30 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு ஒரு முடிவுக்கு வரும் என தெரிகிறது. இதே சமயத்தில் அதிமுகவை பொருத்த வரையில் பாரதிய ஜனதா கட்சி மேலிடம் 80 தொகுதிகள் ஒதுக்கி தர வேண்டும் என கோரிக்கை விடுத்த நிலையில் தற்பொழுது 40 தொகுதிகளை ஒதுக்கி தர அதிமுக மேலிடம் சமரசத்திற்கு வந்திருக்கிறது. அனேகமாக இதன் முடிவில் 45 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு தேர்தல் களத்தை அதிமுகவும் பாஜகவும் சந்திக்கும் என தெரிகிறது.
பாட்டாளி மக்கள் கட்சியை பொறுத்த வரையில் ஒருங்கிணைந்து வந்தாலும் தனித்தனியாக வந்தாலும் 25 தொகுதிகளை ஒதுக்கி தர அதிமுக தரப்பில் திட்டமிட்டு இருக்கிறார்கள். ஒருவேளை தேமுதிக கூட்டணியில் இணைந்தால் அவர்களுக்கு 15 தொகுதிகள் தரவும் திட்டமிடப்பட்டிருக்கிறது.இந்த நிலையில் திமுக தரப்பில் விடுதலைச் சிறுத்தைகள் தங்களுக்கு 15 தொகுதிகள் கேட்டு வருகிறார்கள். அவர்களுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கப்படும் என தெரிகிறது. விடுதலைச் சிறுத்தைகளை பொறுத்தவரையில் ஆட்சியில் பங்கு எதுவும் தேவையில்லை என்று சொல்லிவிட்டார்கள் எனவே இந்த கூட்டணியில் குழப்பங்கள் எதுவும் இல்லை.
இதற்கிடையே டிடிவி தினகரனும் ஓ பன்னீர்செல்வமும் ஒரு முடிவுக்கு வந்திருக்கிறார்கள். தமிழக பாஜக மேல் இடம் அழைப்பு விடுத்தால் பாஜக கூட்டணியில் இணைவது என்ற இறுதி கட்ட முடிவுக்கு வந்திருக்கிறார்கள் . இது குறித்த தகவலை ஓ பன்னீர்செல்வம் சூசகமாக தெரிவித்தும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. டிடிவி தினகரன் ஓ பன்னீர்செல்வம் ஆகியோரை இணைக்கும் முயற்சியில் அண்ணாமலை ஈடுபடுவார் என தெரிகிறது.
செங்கோட்டையன் சசிகலா ஆகிய இருவரை பொருத்தவரையில் தனித்து விடப்பட்டு இருக்கிறார்கள். இதில் செங்கோட்டையனும் பாரதிய ஜனதா கட்சியுடன் இணைவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது அவரும் டெல்லி பாஜக மேலிடத்தில் பேசி வருகிறார். ஏற்கனவே தமிழக வெற்றி கழகத்தை பொருத்தவரையில் தனித்து தான் போட்டியிடும் என்ற சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறது இருந்தபோதிலும் கடைசி கட்டத்தில் என்ன நடைபெறும் என்பது தெரியவில்லை.


