
எங்களுக்குள் இருந்த சண்டையால் பிரிந்திருந்தோம் என்பது உண்மைதான் என்றும், ஆனால், ஆனால் தமிழ்நாட்டின் நலனுக்காகவும், அ.ம.மு.க.வின் நலனுக்காகவும் பிரதமரின் அழைப்பை ஏற்று, மீண்டும் அம்மா ஆட்சியை மலரசெய்ய இந்த கூட்டணியில் இணைந்துள்ளோம் என்று டி.டி.வி.தினகரன் தெரிவித்தார்.
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல் பிரம்மாண்ட தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் இன்று செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில், பிரதமர் நரேந்திரமோடி, அதிமுக பொதுச்செயலாளரும், கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளரான எடப்பாடி கே.பழனிசாமி, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், பாமக தலைவர் அன்புமணி-ராமதாஸ், அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், டி.டி.வி.தினகரன் பேசினார்.அப்போது, தமிழ்நாட்டில் நடக்கும் மக்கள் விரோத ஆட்சியை முடிவிற்கு கொண்டுவர அ.ம.மு.க. தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற வேண்டும் என பிரதமர் நரேந்திரமோடி விரும்பினார். இந்தக் கூட்டணிக்கு தலைமை தாங்கும் எடப்பாடி கே.பழனிசாமியை முழுமனதாக ஏற்றுக்கொண்டு, கூட்டணிக்குள் வந்துள்ளோம் என்றும், நாங்கள் ஜெயலலிதாவின் தொண்டர்கள், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் வழிவந்தவர்கள் என்பதை எதிரிகள் மறந்துவிட்டனர் என்றும், எங்களுக்குள் சண்டை, சச்சரவுகள் இருந்தது உண்மைதான்.
ஆனால் தமிழ்நாட்டின் நலனுக்காகவும், அ.ம.மு.க.வின் நலனுக்காகவும் பிரதமரின் அழைப்பை ஏற்று, மனதில் இருந்த எல்லா கோப, தாபங்களையும் விட்டுவிட்டு மீண்டும் அம்மா ஆட்சியை மலரசெய்ய இந்த கூட்டணியில் இணைந்துள்ளோம் என்றும் டி.டி.வி.தினகரன் தெரிவித்தார்.




