
ஆத்தூர் அருகே மக்காசோள கதிரடிக்கும் இயந்திரம் கவிழ்ந்த விபத்தில் நிகழ்விடத்திலேயே இரு பெண்கள் உடல் நசுங்கி உயிரிழந்தனர், மேலும் 4 பேர் படுகாயம் அடைந்த நிலையில் சிகிச்சைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கீரிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் மனோகரன். இவருக்கு சொந்தமான மக்காசோள கதிர் அடிக்கும் இயந்திரத்தை அதே பகுதியை சேர்ந்த செம்மலை என்பவர் டிராக்டர் இணைத்து ஓட்டிச் சென்றுள்ளார். அந்த டிராக்டரில் கீரிப்பட்டி பகுதியை சேர்ந்த ராணி, கன்னியம்மாள், அம்மாசி, பழனியம்மாள், ஜெயா, நதியா, ஆகியோர், மேல்தொம்பை பகுதிக்கு கூலி வேலைக்கு சென்றுள்ளனர்.
இந்நிலையில் இணைக்கப்பட்ட அறுவடை இயந்திரம் அண்ணா நகர் சாலை வளைவில் வந்தபோது டிராக்டர் கவிழ்ந்ததில் அனைவரும் கீழே விழுந்தனர். இதில் அறுவடை இயந்திரத்தில் அடிப்பகுதியில் சிக்கிய அயோத்தி மனைவி ஜெயா (40) ராஜேஷ் கண்ணன் மனைவி நதியா ( 28 ) ஆகியோர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும் படுகாயம் அடைந்த ராணி (55) கன்னியம்மாள் (47) அம்மாசி (77 ) பழனியம்மாள், (48)ஆகியோர் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து மல்லியக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்காச்சோள கதிர் அடிக்கும் இயந்திரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இரண்டு பெண்கள் உடல் நசுங்கி உயிரிழந்தது அப்பகுதி பொதுமக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

