
சுனாமியின் சூறாவளியில் சுருண்ட உயிர்கள்…மீளாத் துயரில் மாறா சுவடுகள்…இந்தியப் பெருங்கடலில் இடியாய் வந்த சுனாமி..
2004-ஆம் ஆண்டு இந்தியாவை உலுக்கிய சுனாமியை யாரும் அவ்வளவு எளிதில் மறந்துவிடவே முடியாது. அதன் ரணங்களில் இருந்து இருபது ஆண்டுகளை நெருங்கும் வேளையிலும் மீளவே முடியவில்லை என்பதுதான் உண்மை. பல நாடுகளை தாக்கி, பல லட்சம் உயிர்களை கொள்ளைகொண்ட சுனாமி என்ற பெயர் நமக்கு அப்போது மிகவும் புதியது. இந்திய பெருங்கடலையே ஸ்தம்பிக்க வைத்த மகா யுத்தம் என்றே அதை கூறலாம்.
சுனாமி : ( Tsunami)
சுனாமி எனும் சொல் ஜப்பானிய மொழியில் உள்ள “ட்ஃசுனாமி” என்ற சொல்லிலிருந்து உருவானதாகும். இதன் பொருள் ” துறைமுக அலை ” என்பதாகும். சு – என்றால் துறைமுகம் .நாமி — என்பது அலை, சுனாமி — துறைமுக அலை என்ற பொருள் தருகிறது. சுனாமி என்னும் சொல்லே உலக மொழிகளில் எடுத்தாளப்பட்டு வருகிறது. இரண்டாயிரம் ஆண்டுகளாக தமிழில் ” கடற்கோள் ” என்று அழைத்து வந்துள்ளனர். கடலுக்கு அடியில் ஏற்பட்ட நிலநடுக்கம் போன்ற மிகப்பெரிய மாறுதல்களால் திடீரென கடல் நீர் மாபெரும் அலைகளாக உருவெடுத்து கரையைச் சேர்ந்து அங்கே பேரழிவுகளை ஏற்படுத்தும் .இவற்றையே”கடற்கோள்” ஆழிப்பேரலை என்றும் அழைக்கப்பட்டன.
ஏரிகள் , கடல்கள் உள்ளிட்ட பெரிய நீர்ப்பரப்பு பகுதிகளிலேயே சுனாமி ஏற்படுகிறது.அவை பூகம்பங்கள் , நிலச்சரிவுகள் , எரிமலை வெடிப்புகள் , பனிப்பாறைகள் நகர்வு போன்றவற்றால் உருவாகிறது.பெரிய நீர்ப் பரப்புகளில் திடீரென வேகமாக பெரிய அளவு நீர் இடம் பெயர்க்கப்படும் போது ஏற்படும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அலைத் தொடர்களைக் குறிக்கும். மேலும் நில நடுக்கம், மண்சரிவுகள், பனிப்பாறைகள் நகர்வு ,எரிமலை வெடிப்பு , விண்பொருட்களின் மோதல்கள் போன்றவை சுனாமி அலைகளை ஏற்படுத்தும் மூலக்காரணங்களாகும்.
1950 – ம் ஆண்டுகளில் பெரும் நிலச்சரிவுகள் மூலமாக சுனாமிகள் உண்டாவதாக நம்பப்பட்டது. தண்ணீருக்கடியில் நிலச்சரிவுகளால் ஏற்படும் சுனாமியைச் ” சியோருக்கஸ் ” — என்று அழைத்தனர். கடலுக்கடியில் ஏற்படும் நிலநடுக்கத்தால் நீர் உந்தப்பட்டு மிகப் பெரிய அலைகள் ஏற்படுகிறது .இவ்வலைகள் கரையைச் சேர்ந்து பெரும் சேதத்தை ஏற்படுத்துவதையே சுனாமி என அழைக்கப்பட்டது. சுனாமியின் வேகம் மிகக் கொடுமையானது.
இது சில மணி நேரங்களில் மிகப் பெரிய அழிவை உண்டாக்கும் சக்திவாய்ந்தாக விளங்குகிறது . இந்தச் சுனாமி ஒரு அலையால் தோன்றுவது அல்ல, பல அடுக்கடுக்கான அலைகளால் தோன்றுகிறது.இவை நொடியில் கடற்பரப்பு முழுவதும் பரவி கரையை நோக்கி , மணிக்கு ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் கடந்து பேரழிவைத் தருகிறது.
சுனாமியால் அதிக சேதங்களைக் கொண்டு பாதிப்படைவது ஜப்பான் . 2004 — ஆம் ஆண்டு இந்தியப் பெருங்கடலில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் மிக மோசமான ஆழிப்பேரலைக் காரணமாக 2,30,000 மக்கள் உயிரிழந்தனர். சுமித்திராப் பகுதியில் அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன.எனவே அங்கு சுனாமிக்கான வாய்ப்புகள் அதிகம்.2004 — ம் ஆண்டில் டிசம்பர் 26 – ம் நாள் “யுரேனியன் ” நிலத்தட்டின் ஒரு பகுதியான பர்மாநிலத்தட்டும், இந்தோ– ஆஸ்திரேலியன் நிலத்தட்டின் ஒரு பகுதியாகிய இந்திய நிலத்தட்டும், இந்தோனேசியாவின் வடக்கே சுமத்திராத் தீவில், கடலுக் கடையில் மோதியது. அதனால் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் தோன்றிய அலைகள் தான் இந்தியப் பெருங்கடலில் சுனாமியை ஏற்படுத்தியது. எனவே இது 2004– ம் ஆண்டின் மிகப்பெரிய இயற்கைப் பேரழிவாகும்.
கொடூரத்தின் சுவடுகள்;
2004 –ம் ஆண்டு டிசம்பர்- 26 -ம் நாள் , 00.58 :53 நேரம் , சுமித்திராத் தீவின் வடமேற்கு கையிலிருந்து 150 – கி.மீ தூரத்தில் ,30 கி.மீ ஆழத்தில் ஆழ்கடலில் நிகழ்ந்த நில நடுக்கம் ஆகும். 9.3 புள்ளிகள் ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கமாக பதிவானது.இது நிலநடுக்கப் பதிவுகளில் இரண்டாம் மிக வலிமை வாய்ந்த நிலநடுக்கம் ஆகும்.
இவற்றின் காரணமாக எழுந்த ஆழிப்பேரலை தாய்லாந்து , இந்தோனேஷியா, மலேசியா, இலங்கை , இந்தியா , மாலத்தீவுகள் ஆகிய நாடுகளைத் தாக்கியதில் 14 – நாடுகளைச் சேர்ந்த 230, 000 பேர் உயிரிழந்தனர். இந்தியாவில் உயிரிழந்தோர் அதிகாரப் பூர்வமான புள்ளிவிவரப் படி 6,400 பேர் , தமிழகத்தில் 2,758 – பேரும் ,புதுவையில் – 377 – பேரும் உயிரிழந்தனர். என்பது உள்ளத்தை உறையச் செய்யும் செய்தியாகவும், கடலில் ஏற்பட்ட கோரத்தாண்டவத்தின் எஞ்சிய சுவடுகளாக நெஞ்சில் நீங்காத வேதனையைத் தரும் வரலாற்று வடுக்களாக உள்ளது.
சுனாமி பற்றிய வரலாறு ஆசிரியர்களின் கருத்துகள்;
தியுசிடைட்ஸ்;
கி.மு.426 – ம் ஆண்டு கிரேக்க வரலாற்றாசிரியர் ” தியுசிடைட்ஸ் ” என்பவர் சுனாமி ஏற்படுவதற்கான காரணங்களை ” பிலோப்பேர்னேசியப் போர் வரலாறு ” என்ற புத்தகத்தில் கூறியுள்ளார். இவர் தான் முதன் முதலில் கடலில் நிலநடுக்கம் ஏற்பட்டது என்றும்,எந்த இடத்தில் நிலநடுக்கம் உண்டானதோ , அந்த இடத்தில் கடல் உள்வாங்கும் , பின்பு திடீரென பின்வாங்கும் இரட்டை சக்திவாய்ந்த வெள்ளப்பெருக்கை ஏற்படுத்த வல்லது என்பதைக் கூறினார்.
அம்மினஸ் மாசில்லினுஸ்;
ரோமன் வரலாற்றுப் பேராசிரியரான அம்மினஸ் மாசில்லினுஸ் என்பவர் கி.பி 365 – ல் அலெக்சாந்திரியாவில் மிகப்பெரிய அழிவுக்குப்பின் கூறியது.நிலநடுக்கத்தில் தொடங்கி கடல் நீர் பின்னடைவு , அதனைத் தொடர்ந்து ராட்சத அலை என்ற தொடர்ச்சியான நிகழ்வாக அமைகிறது என்கிறார்.நிலநடுக்கம் என்பது நிலம் , கடல் , மலை என அனைத்திலும் நிகழும். நிலப்பகுதியில் வந்தால் நிலத்தில் உள்ளவை அதிர்ந்து சேதமடையும். கடலில் உண்டானால் , ஆழமானப் பகுதியிலுள்ள நிலத்தட்டுகளின் அசைவு பெரிய அலைகளை உருவாக்குகின்றது.
டெக்டானிக் பிளேட்டுகள்;
மலைகளில் ஏற்படும் சுனாமி எரிமலையாக உருவாகிறது. பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ஒரே தட்டாகத்தான் இருந்தது. அதன் மீதுதான் பூமி இருந்தது .ஆனால் கண்டங்களாகப் பிரிய , பிரிய அதன் தட்பவெப்ப, இயற்கை சூழ்நிலைகளுக்கேற்ப, பல்வேறு நிலத்தட்டுகள் உருவாகின .இந்தத் தட்டுகளின் மீது தான் ஒவ்வோறு கண்டமும் இருக்கின்றன.நிலம்,கடல் ஆகிய வற்றைத் தாங்கி நிற்பது இந்த நிலத் தட்டுகள் தான்.இதையே ” டெக்டானிக் பிளேட்கள் ” என்று புவியியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.
தமிழ் நாட்டைச் சுருட்டிய சுனாமி;
2004 – ம் ஆண்டு டிசம்பர் 26 – ம் நாளில் ஆட்டிப்படைத்து ஆர்ப்பாட்ட சுனாமியால் தமிழக கடலோர மாவட்டங்கள் மிக மோசமான நிலையை அடைந்தன. அது மறக்க முடியாத பதறவைக்கும் வேதனையின் இருண்ட நினைவுகள். உள்ளம் உறைந்த உருக்குலைந்த நினைவலைகள்.சுமத்திராவில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக அன்று வந்த சுனாமி அலைகள் சுமார் 30 மீட்டர் உயரத்திற்கு உயர்ந்து எழுந்தன.
சுனாமியால் அதிகம் பாதிக்கப்பட்ட இடமாச் சென்னை பதிவாகியது. அங்கு தமது இயல்பான வாழ்க்கைச் செயலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த மக்களை எதிர்பார்த்த விதமாக சுனாமி என்னும் காலன் கதிகலங்க வைத்து அள்ளிச் சென்றான். சென்னை , வேளாங்கண்ணி ,கன்னியாக்குமரி, நாகப்பட்டினம் , ஆகியவற்றுடன் கடலூர் மற்றும் பாண்டி என அனைத்து கடலோர மாவட்டங்களும் பாதிக்கப்பட்டன.சுனாமி ஆடிய கோரத்தாண்டவத்தில் தமிழகத்தில் பத்தாயிரத்திற்கும் அதிகமான மக்கள் உயிரிழந்தனர்.
நாகப்பட்டினத்தில் மட்டும் 6- ஆயிரம் பேரும் , சென்னையில் 206 – பேரும் , கடலூரில் 610 – பேரும் உயிரிழந்த செய்திகள் பெரும் வருத்தத்திற்குரிய நிலையைத் தந்தது சுனாமி. உயிர் சேதங்கள் மட்டுமன்றி கோடிக்கணக்கான பொருட்கள் , இயற்கை வளங்கள் , மரங்கள் , கால்நடை கள் எனப் பல பேரிழப்பைக் கண்டது தமிழகம்.இன்று வரை அந்த கொடூரத் துயரத்திலிருந்து மீளமுடியாத நிலையே காணப்படுகின்றன.
தமிழகத்தில் ஏற்பட்ட சுனாமி பாதிப்பின் நினைவாக கன்னியாக்குமரி முக்கடல் சங்கமத்தில் சுனாமி நினைவுப் பூங்கா அமைக்கப்பட்டுள்ளன. சுனாமி ஏற்படுத்திய துயரங்களும், வேதனைகளும் 17 – வது ஆண்டாக நினைவுக் கொள்ளப் படுகிறது.இந்தப் பேரழிவின் பெரும்துன்பத்தை மீண்டும் நினைவுக் காட்சியாக்கி நாம் இழந்த உறவுகளையும், நட்புகளையும் மீனவர்களையும் நினைவேந்தும் விதமாக கடலன்னைக்கு பால், பூக்கள் போன்றவற்றை தூவி , கண்ணீர் மேவி கடந்த துயரமதை கடலோடு கலக்கிறோம் கண்ணீராக.! மேலும் மலர் வளையம் வைத்தும் , மெழுகு தீபம் ஏற்றியும் தண்ணீரில் தத்தளித்து கடலுக்கு உணவான உறவுகளை எண்ணியும் பேரழிவை ஏற்படுத்திய கருப்பு நாளை , கனத்த மனதுடன் அனுசரித்து அஞ்சலி செலுத்தி அமைதி கொள்வோம் !
பேரழிவுகள் தரும் துயரம் நிறைந்த பாதைகள்;
இது வரை நூறு ஆண்டுகளில், 58 – சுனாமிப் பேரழிவைக் கண்டிருக்கிறது இந்த உலகம்.இதில் 2 -லட்சத்து 60 – ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர் .சராசரியாக ஒரு பேரிடரின் போதும் 4, 600 – பேர் உயிரிழந்ததாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இவற்றில் அதிக உயிரிழப்புகளைப் பதிவு செய்யப்பட்டது, இந்தியப் பெருங்கடலில் 2004 – ம் ஆண்டு நிகழ்ந்த ஆழிப்பேரலை நிகழ்வுதான் என்பது மனதை பதறவைக்கும் செய்தியாகும்.
இதுவரை உலகம் காணாத மிக மோசமான இயற்கைப் பேரிடரும் இதுவே ஆகும் என்பது வேதனைக்குரியது. இதன் பிறகே உலகம் விழிப்புணர்வுக் கொண்டது.இது போன்ற பேரழிவைத் தரும் ஆழிப் பேரலையிலிருந்து தற்காத்துக் கொள்ளும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன.முன்னதாகவே எச்சரிக்கும் எச்சரிக்கை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இனி விழிப்புணர்வுடன் எச்சரிக்கையாக இருந்து பேரிடரை எதிர் கொண்டு தன்னைக் காத்து , சுற்றத்தைக்காப்போம்.!

