
பிடே உலக மகளிர் சதுரங்கப் போட்டியில் இந்தியாவின் திவ்யா தேஷ்முக் வெற்றி பெற்றதற்குப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
ஜார்ஜியா நாட்டின் படூமி நகரில் நடைபெற்ற பிடே உலக மகளிர் சதுரங்கப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியர்களான கோனேரு ஹம்பியும் திவ்யா தேஷ்முக்கும் விளையாடினர்.
இந்த ஆட்டத்தில் திவ்யா தேஷ்முக் வெற்றிபெற்றுச் சாம்பியன் ஆகியுள்ளார். இது குறித்துப் பிரதமர் எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் இறுதிப் போட்டியில் இந்தியப் பெண்கள் இருவர் பங்கேற்றது வரலாற்றுச் சிறப்பு மிக்கது எனக் குறிப்பிட்டுள்ளார்.
இருவருக்கும் பிரதமர் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். திவ்யா தேஷ்முக் உலகச் சாம்பியனும் கிராண்ட் மாஸ்டரும் ஆன நாள் இந்திய சதுரங்க வரலாற்றில் ஒரு பொன்னாள் என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

