
கான்பூர் ஐஐடி, மும்பை ஐஐடி ஆகியவற்றில் தனியார் அறக்கட்டளை உதவியுடன் உயர் ஆராய்ச்சி மையங்கள் அமைப்பதற்குப் பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் புரிந்துணர்வு உடன்பாடுகள் கையொப்பமாகியுள்ளன.
தில்லி பாரத மண்டபத்தில் அரசு, கல்வி நிறுவனங்கள், தொழில்துறை, புத்தாக்க அமைப்பு ஆகியவற்றின் தலைவர்கள் ஒன்றாகப் பங்கேற்கும் யுகம் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார்.
கான்பூர் ஐஐடி, மும்பை ஐஐடி ஆகியவற்றில் புத்தாக்கங்கள் கண்டுபிடிப்பதற்கு ஆராய்ச்சி மையங்கள் அமைக்க வாத்வானி அறக்கட்டளையுடன் 1400 கோடி ரூபாய் மதிப்பிலான புரிந்துணர்வு உடன்பாடுகள் கையொப்பமிடப்பட்டன. அவை பிரதமர் முன்னிலையில் பரிமாறிக்கொள்ளப்பட்டன.
மாநாட்டில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, பல்வேறு துறைகளில் ஆராய்ச்சியை மேற்கொள்ளத் தேவையான உடன்பாடுகள் செய்யப்பட்டுக் கூட்டு முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். இதில் தொடர்புடைய வாத்வானி அறக்கட்டளை, கான்பூர், மும்பை ஐஐடிகள் ஆகியோருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொண்டார்.
இந்த உடன்பாட்டின் மூலம் கான்பூர் ஐஐடியில் செயற்கை நுண்ணறிவு, நுண்ணறிவு அமைப்புகள் பற்றி ஆராய்ந்து புத்தாக்கங்கள் கண்டுபிடிக்கவும், மும்பை ஐஐடியில் உயிரி அறிவியல், உயிரித் தொழில்நுட்பம், மருத்துவம் ஆகியன பற்றி ஆராய்ந்து புத்தாக்கங்கள் கண்டுபிடிக்கவும் ஆராய்ச்சி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.


