
கோவையில் நடைபெற்ற மகளிர் தின விழாவில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆட்டோ ஓட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களுக்கு விருதுகள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.
அனைத்து துறைகளில் பெண்கள் தற்போது சாதித்து வந்தாலும், பெண்கள் தயக்கம் காட்டும் சில துறைகளில், ஆட்டோ ஓட்டும் தொழில் உள்ளது.கடந்த சில ஆண்டுகளாகச் சென்னை, பெங்களூரு, கோவை, மும்பை போன்ற பெருநகரங்களில் ஆட்டோ ஓட்டும் பெண்கள் அதிகரித்து வருகின்றனர்.தற்போது, சிறு நகரங்களிலும் கணிசமாக ஆட்டோ ஓட்டும் பெண்கள் அதிகரித்து வருகின்றனர்.இந்நிலையில் இது போன்ற பெண்களை ஊக்குவிக்கும் விதமாகக் கோவையில் பெண் ஆட்டோ ஓட்டுனர்களை கவுரவிக்கும் விழா நடைபெற்றது.
இதில் சென்னை, கோவை உட்பட பல்வேறு நகரங்களில் ஆட்டோ ஓட்டும் பெண் ஓட்டுனர்கள் கலந்து கொண்டனர். இதில் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மகளிர் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு சிங்கப்பெண் விருது வழங்கிக் கவுரவிக்கப்பட்டது.மகளிர் தினா விழாவை முன்னிட்டு நடைபெற்ற இந்நிகழ்ச்சி குறித்து பெண் ஆட்டோ ஓட்டுனர்கள் கூறுகையில், எங்களது அடிப்படை வாழ்வாதார அவசியத்தால் ஆட்டோ ஓட்டுனராக இருப்பதாகவும், ஆரம்பத்தில் சில தயக்கங்கள் இருந்தாலும் தற்போது அதிக அளவில் பெண் ஆட்டோ ஓட்டுனர்கள் உருவாகி உள்ளதால் எங்களிடையே தனி குழு உருவாக்கித் தற்போது செயல்பட்டு வருவதாகத் தெரிவித்தனர்.

