
கான்பூர்:
உத்தரபிரதேச மாநிலத்தில் நடந்த சம்பவம் ஒன்று இணையத்தில் வீடியோவாக வெளியாகிப் பரபரப்பை தந்து வருகிறது. இது தொடர்பான விசாரணையைப் போலீசார் மேற்கொண்டு வருவதுடன், சம்பந்தப்பட்டவர்களுடன் நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் உறுதி தெரிவித்துள்ளனர்.
வடமாநிலங்களில் எவ்வளவுதான் போலீசார்கள் விழிப்பாக இருந்தாலும், ஊர் பஞ்சாயத்துக்களை முழுவதுமாகக் கட்டுப்படுத்த முடிவதில்லை. குடும்ப பிரச்சனைகளாக இருந்தாலும், ஊர் பஞ்சாயத்தினரிடமே விவகாரம் சென்றடைகிறது.
இந்த விவகாரங்களுக்கு ஊர் பஞ்சாயத்துக்களே தீர்ப்புகளைச் சொல்கின்றன. இந்தத் தீர்ப்புகள் எவ்வளவு கொடூரமாக இருந்தாலும்கூட, அவைகளுக்கு கிராம மக்களும் அப்படியே கட்டுப்பட்டும் வருகிறார்கள்.
சமீபத்தில் பிரதாப்கரின் சோட்கி இப்ராஹிம்பூர் என்ற கிராமத்தில் ஒரு சம்பவம் நடந்தது. திருமணமான பெண்ணின் கணவர், மும்பையில் பணிபுரிகிறார்.. இந்தத் தம்பதிக்குக் குழந்தைகளும் இருக்கிறார்கள்.
இளம் தம்பதி:
இப்பெண்ணுக்கு அதே கிராமத்தைச் சேர்ந்த இளைஞருடன் தகாத உறவு இருப்பது, ஊர்மக்களுக்கும் தெரியவந்துள்ளது. சம்பவத்தன்று இந்த ஜோடியை, கிராம மக்களே ஒன்று திரண்டு கையும் களவுமாகப் பிடித்துள்ளனர். ஆனால், அந்த இளைஞர், எகிறி தப்பி ஓடிவிட்ட நிலையில், பெண் மட்டும் ஊர் மக்களிடம் வசமாகச் சிக்கி கொண்டார்.
அந்தப் பெண்ணை அங்கிருந்த மரத்தில் கட்டி வைத்து அனைவரும் சேர்ந்து தாக்கினார்கள். அதுவும், அப்பெண்ணின் குழந்தைகள் கண்முன்னேயே மரத்தில் கட்டிவைத்து செருப்பு மாலை அணிவித்தனர். பெண்ணுக்கு முகத்தில் கருப்பு மைப்பூசி, தலைமுடியை வெட்டினார்கள். இதை அவர்களே வீடியோ எடுத்து, சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.
கிராம மக்கள்:
இதனிடையே, ஊர் மக்களிடமிருந்து தப்பித்து ஓடிய இளைஞர், நேராகப் போலீஸுக்கு சென்று, ஒட்டுமொத்த கிராமத்தினர் மீதும் புகார் தந்துவிட்டார். பிறகு போலீசார் விரைந்து வந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த பெண்ணை மீட்டனர். கிராமத்தைச் சேர்ந்த 15 பேரையும் கைது செய்தனர். இந்தச் சம்பவமும், இது தொடர்பான வீடியோவும் அப்போது மீடியாவில் மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டது.
இந்நிலையில், உத்தரபிரதேச மாநிலம் அம்ரோஹாவில் மற்றொரு சம்பவம் நடந்துள்ளது. இந்தப் பகுதியில் வசித்து வரும் திருமணமான பெண்ணுக்கு, இளைஞர் ஒருவருடன் தவறான உறவு இருந்துள்ளது.
மொட்டை மாடி:
சம்பவத்தன்று, அந்த இளைஞன், பெண்ணைச் சந்திப்பதற்காக வீட்டுக்கு வந்துள்ளார். இரவு நேரம் வீட்டு மொட்டை மாடியில் அந்தப் பெண்ணைத் தனியாகச் சந்தித்திருக்கிறார். அப்போது திடீரெனப் பெண்ணின் கணவரும், அவரது குடும்பத்தினரும் மொட்டை மாடியில் இவர்கள் 2 பேரையும் கையும் களவுமாகப் பிடித்துவிட்டனர். ஆனால், அந்தப் பெண்ணை விட்டுவிட்டு, இளைஞனை மட்டும் சரமாரியாக அடித்து உதைத்துள்ளனர். இதை அவர்களே வீடியோவாக எடுத்து, இணையத்திலும் பதிவிட்டுள்ளனர்.
அந்த வீடியோவில் இளைஞரைக் கொடூரமாக அனைவரும் சேர்ந்து தாக்குவது பதிவாகியிருக்கிறது. வலி தாங்க முடியாமல் இளைஞர் அலறுகிறார். “இனிமேல் இங்கே வரவே மாட்டேன். என்னை மன்னிச்சிடுங்க” என்று கெஞ்சுகிறார். ஆனாலும், பெண்ணின் குடும்பத்தினரும், அந்தப் பகுதி மக்களும் சேர்ந்து இளைஞரைக் கடுமையாகத் தாக்குகிறார்கள்.
தொடர் விசாரணை :
நீளமான மூங்கில் குச்சிகளாலும், பெல்ட்களாலும் இளைஞரைச் சுற்றி வளைத்து விளாசுகிறார்கள். இந்த வீடியோ வைரலாகியதையடுத்து, போலீசார் இது தொடர்பான விசாரணையில் தற்போது இறங்கியிருக்கிறார்கள். சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரணை நடைபெற்று வருவதாகவும், குற்றவாளிகள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் போலீசார் உறுதி தந்துள்ளனர்.



