
ஆட்சியில் பங்கு என்பது தமிழ்நாட்டுக்கு ஒத்து வராது என்று திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் பாஜக, அதிமுக அடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணி ஓரணியாகவும், திமுக, காங்கிரஸ் அடங்கிய இந்தி கூட்டணி மற்றோர் அணியாகவும் உள்ளது. இவை தவிர நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக் கழகம் ஆகியனவும் களத்தில் உள்ளதால் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் நால்முனைப் போட்டி உள்ளது.
அதேநேரத்தில் இந்தி கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியில் தலைவர்கள் சிலர் கடந்த தேர்தலை விட அதிகத் தொகுதிகள் கேட்க வேண்டும் என்றும், ஆட்சியில் பங்கு கேட்க வேண்டும் என்றும் கட்சித் தலைமைக்கு வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் சென்னையில் தனியார் ஊடகத்தின் சார்பில் நடைபெற்ற வட்டமேசை மாநாட்டில் திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார்.
அப்போது கூட்டணி ஆட்சி பற்றிய வினாவுக்கு விடையளித்த அவர், ஆட்சியில் பங்கு என்பது தமிழ்நாட்டுக்கு ஒத்து வராது என்றும், இது காங்கிரசுக்கும் தெரியும் என்றும் கூறினார். ஆட்சியில் பங்கு என்னும் முழக்கம் கூட்டணியைப் பிளவுபடுத்தும் சதி என்றும் அவர் கூறினார்.
மத்திய அரசுடனான திமுகவின் உறவு பற்றிப் பேசிய அவர், உறவுக்குக் கைகொடுப்போம், உரிமைக்குக் குரல்கொடுப்பேம் என்ற கொள்கையை மத்திய அரசுடன் கடைப்பிடித்து வருவதாகக் கூறினார்.




