Udhayanidhi Stalin: கருப்பு பணத்தை மீட்பேன் எனச் சொன்னது என்ன ஆச்சு?

Advertisements

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு என்ன ஆச்சு, கருப்பு பணத்தை மீட்பேன் எனச் சொன்னது என்ன ஆச்சு? என்பது உள்ளிட்ட 11 கேள்விகளைப் பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுப்பியுள்ளார்.

கச்சத்தீவு விவகாரத்தை எழுப்பியிருக்கும் பிரதமர் மோடி, இந்த விவகாரத்தில் திமுக காங்கிரஸ் இரட்டை வேடம்போடுவதாகவும், தமிழக மக்களின் நலன்களைப் பேண திமுக எதுவுமே செய்யவில்லை என்பது புலப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் இப்போது பெரிய பூதாகரமாகியிருக்கும் நிலையில் கடந்த 10 ஆண்டுகளாக மத்திய ஆட்சி பொறுப்பில் இருக்கும் பிரதமர் மோடி கச்சத்தீவு விவகாரத்தில் எடுத்த நடவடிக்கை என்ன? என்று திமுக கேள்வி எழுப்பியுள்ளது. நாடாளுமன்ற தேர்தலையொட்டி வேலைவாய்ப்பு, விலைவாசி உயர்வு, கருப்பு பண மீட்பு உள்ளிட்ட விவகாரங்களில் மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் அதிருப்தியை திசைதிருப்பக் கச்சத்தீவு விவகாரத்தைப் பிரதமர் மோடி எழுப்பியிருப்பதாகவும் திமுக, அதிமுக குற்றம்சாட்டியுள்ளன.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில்

இதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடுத்திருக்கும் பதிலில், பத்தாண்டுகளாகக் கும்பகர்ணத் தூக்கத்தில் இருந்துவிட்டு, தேர்தலுக்காகத் திடீர் மீனவர் பாச நாடகத்தைப் பிரதமர் மோடி அரங்கேற்றுவதாகக் குற்றம்சாட்டியுள்ளார். அத்துடன் பிரதமர் மோடிக்கு தமிழ்நாட்டு மக்கள் கேட்கும் மூன்று கேள்விகள் கேட்பதாகவும் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு ஒரு ரூபாய் வரியாகத் தந்தால், ஒன்றிய அரசு 29 பைசா மட்டுமே திருப்பித் தருவது ஏன்?, இரண்டு இயற்கைப் பேரிடர்களை அடுத்தடுத்து எதிர்கொண்டபோதும், தமிழ்நாட்டுக்கு ஒரு ரூபாய் கூட வெள்ள நிவாரணம் வழங்காதது ஏன்?, பத்தாண்டுகால பா.ஜ.க. ஆட்சியில் தமிழ்நாட்டுக்குக் கொண்டுவரப்பட்ட சிறப்புத் திட்டம் என ஒன்றாவதுண்டா? என்ற கேள்விகளை முன்வைத்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திசை திருப்பல்களில் ஈடுபடாமல், இதற்கெல்லாம் விடையளியுங்கள் பிரதமர் அவர்களேயெனக் கேட்டுள்ளார்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி

இதேபோல் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பிரதமர் மோடிக்கு ‘பதில் சொல்லுங்க மோடி’ என்ற ஹேஸ்டேக்கில் 11 கேள்விகளை முன் வைத்துள்ளார். மீனவர்கள்மீது தாக்குதலே நடக்காது என்று வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்த நீங்கள், அவர்கள்மீதான இலங்கையின் தாக்குதலும், கைதுகளும், படகு பறிமுதல்களும் தொடர்ந்து நடக்கிறதே, இதை ஏன் தடுத்து நிறுத்தவில்லை?, தேர்தல் வந்ததும் இத்தனை முறை தமிழ்நாட்டுக்கு வர முடிகிற உங்களால், கஜா புயல், மிக்ஜாம் புயல் எனப் பேரிடர்களால் தமிழ்நாட்டு மக்கள் பாதிக்கப்பட்டபோது ஆறுதல் சொல்ல ஒரு முறை கூட வராதது ஏன்? என்று கேட்டுள்ளார்.

2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு என்ன ஆச்சு?

2 கோடி வேலைவாய்ப்பு தருகிறேன் என்ற உங்கள் வாக்குறுதி எங்கே போனது?, இந்தியாவை 2020-ல் வல்லரசு ஆக்குவேன் என்று நாள் குறித்தீர்களே, அதனை 27 ஆண்டுகள் தள்ளிப்போட்டது எதனால்?, கருப்பு பணத்தை மீட்பேன் என்று கடுகு டப்பாவிலும், சுருக்குப் பையிலும் எங்கள் மக்கள் சேமித்து வைத்திருந்த 500, 1000-த்தை பிடுங்கினீர்களே, கருப்புப் பணத்தை மீட்காதது ஏன்?, ஏழரை லட்சம் கோடி ஊழல் செய்த உங்களை CAG அறிக்கை அம்பலப்படுத்தியும் அதைப் பற்றி வாய் திறக்காதது ஏன்? என்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழை புறக்கணிப்பதேன்?

அத்துடன், அடுக்கடுக்காய் வடக்கே 6 எய்ம்ஸ் மருத்துவமனைகளை ஒரே வாரத்தில் திறந்த நீங்கள், 2019-ல் அடிக்கல் நாட்டப்பட்ட மதுரை எய்ம்ஸ்-க்கு அடுத்த செங்கலை எப்போது வைப்பீர்கள்?, அதானியின் நலனுக்காக நாடு நாடாகச் சுற்றும் நீங்கள் எங்கள் மீனவர்களின் நலனுக்காக எத்தனை முறை இலங்கைக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினீர்கள்?, கடந்த 3 ஆண்டுகளாகத் தமிழ்நாட்டில் ஆட்சியில் இருக்கும் திமுக அடுக்கடுக்காகத் தன்னுடைய சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்கும்போது, நாட்டை 10 ஆண்டுகள் ஆண்டப் பிறகும் சாதனைகளைச் சொல்ல முடியாமல், எதிர்க்கட்சிகளையே நீங்கள் விமர்சித்துக் கொண்டிருப்பதேன்?, வாழும் தமிழின் வளர்ச்சிக்குப் பெரிதாக நிதி இல்லை, செத்த மொழி சமஸ்கிருதத்துக்கு 5 ஆண்டுகளில் ரூ.1074 கோடி எதற்கு?, நீங்கள் தமிழை, தமிழர்களை அலட்சியப்படுத்துவதை சுயமரியாதையுள்ள தமிழர்கள் ஏற்பார்கள் என்று எப்படி நம்புகிறீர்கள்? என்றும் அடுக்கடுக்கான கேள்விகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுப்பியுள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *