
வெளியூர் செல்ல 1250 சிறப்புப் பேருந்துகள்!
தமிழகத்தில் சனி, ஞாயிறு விடுமுறை நாட்களோடு சுப முகூர்த்த நாளும் சேர்ந்து வருகிறது. இதனால் சுப நிகழ்ச்சிகளுக்கு அதிகளவில் பொதுமக்கள் வெளியூர் செல்ல வாய்ப்பு உள்ளது. இதன் தொடர்ச்சியாக வருகின்ற திங்கள் கிழமை விநாயகர் சதுர்த்தியும் கொண்டாடப்பட உள்ளது. இதனால் வெளியூரில் வேலை செய்யும் நபர்கள் சொந்த ஊர் செல்ல ஆர்வம் காட்டுவார்கள்.
பெரும்பாலானோர் ஒரே நேரத்தில் வெளியூர்களுக்கு பயணம் மேற்கொள்ள வாய்ப்பு உள்ளதால் பேருந்துகளில் கூட்ட நெரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால் சிறப்புப் பேருந்துகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாகத் தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், வெள்ளி, சனி, ஞாயிறு மற்றும் செவ்வாய் கிழமைவரை பயணிகள் பேருந்தில் பயணம் செய்ய அதிக அளவில் முன்பதிவு செய்துள்ளனர். இதனால் தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாகச் சிறப்புப் பேருந்துகளை இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
தற்போது பயணிகள் எவ்வித சிரமமின்றி பயணம் மேற்கொள்ள ஏதுவாகச் சென்னையிலிருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு இன்று கூடுதலக 650 பேருந்துகளும், நாளை 200 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன. அதன்படி கோவை, மதுரை, திருநெல்வேலி, திருச்சி, சேலம் போன்ற இடங்களிலிருந்து முக்கிய இடங்களுக்கும் மற்றும் பெங்களூருவிலிருந்து பிற இடங்களுக்கும் 400 சிறப்புப் பேருந்துகள் என மொத்தமாக 1250 பேருந்துகள் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

