
அரபிக் கடலில் நிலவி வரும் குறைந்த காற்று அழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்துள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.கோவா – தெற்கு கொங்கன் கடலோரப் பகுதி மற்றும் மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளது.
இதன் காரணமாக தென்மேற்கு பருவமழை கேரளாவில் இன்னும் இரண்டு நாட்களில் தீவிரமாக மழை தொடங்க உள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.மேலும் தமிழ்நாட்டில் சில பகுதிகளிலும் இந்த கனமழை பரவுவதற்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தொடர்ந்து நாளை முதல் மூன்று நாட்களுக்கு கோவை மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வடக்கு நோக்கி நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் காற்று அழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.வரும் 27ஆம் தேதி வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.




