
பாலஸ்தீனத்தின் காசா நகரத்து மக்கள் உண்மையிலேயே பட்டினியால் வாடுவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலின் தாக்குதலால் சீர்குலைந்துள்ள காசாவில் உள்ள இருபது இலட்சம் பேரில் மூன்றில் ஒரு பங்கினர் பல நாட்கள் பட்டினியால் வாடுவதாகவும், இதனால் அங்குப் பட்டினிச்சாவுகள் நேரும் அபாயம் உள்ளதாகவும் ஐ.நா. உணவுத் திட்ட அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
அப்படிப் பட்டினியில் வாடும் நிலை இல்லை என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு கூறியிருந்தார். இது குறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், பெஞ்சமின் நேதன்யாகு துணிந்த பொய் சொல்வதாகத் தெரிவித்தார்.
இஸ்ரேலின் நடவடிக்கை காசாவில் பசிக்கொடுமையை அதிகரிக்கும் வகையில் உள்ளதாகக் குற்றஞ்சாட்டினார். காசாவின் சிறார்கள் பசியால் வாடியுள்ளதாகவும், உண்மையிலேயே பட்டினிக் கொடுமையில் சிக்கியுள்ளதாகவும் டிரம்ப் தெரிவித்தார்.
காசா மக்களின் பட்டினியைப் போக்க இப்போது வழங்கப்படும் உணவு போதாது என்றும், பெருமளவில் உணவுப்பொருட்களை வழங்க வேண்டும் என்றும் ஐ.நா. மனிதநேய உதவிகளுக்கான தலைவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. அதையடுத்துக் காசா பற்றிய டிரம்பின் அறைகூவல் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.



