
ஒகேனக்கல்:
கர்நாடகா காவிரி கரை ஓரங்களில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்களுக்கு நீர்வரத்து கடந்த ஒரு வாரமாகக் குறை வதும் அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் நேற்று ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 1500 கனஅடி தண்ணீர் வந்தது. இதையடுத்து காவிரி நீர்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்தது.
இதனால் இன்று காலை 8 மணி நிலவரப்படி நீர்வரத்து 2 ஆயிரம் கன அடியாக அதிகரித்து வந்தது.
மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டியது.
சுற்றுலாப் பயணிகள் குடும்பத்துடன் பரிசல் பயணம் மேற்கொண்டு காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர்.
மேலும் தொங்கு பாலத்தில் நின்று காவிரி ஆற்றில் பாறைகளுக்கு நடுவே விழும் தண்ணீரை ஆர்வமுடன் ரசித்து மகிழ்ந்தனர்.
பின்னர் அவர்கள் மெயின் அருவியில் குளித்தும், பெண்கள் காவிரி ஆற்றில் குளித்தும் மகிழ்ந்தனர்.
காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.



