
ஆற்காடு ஒழுங்கு முறை குடோன் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைச் சம்பந்தப்பட்ட சட்டமன்ற தொகுதிகளுக்கு அனுப்பி வைக்கும் பணியை மாவட்ட ஆட்சியர் வளர்மதி தொடங்கி வைத்தார்.
தமிழக முழுவதும் மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் அந்தந்த தொகுதிகளுக்கான தேர்தல் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது அந்த வகையில் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஆற்காடு பகுதியில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் திறக்கப்பட்டு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பிரித்து அனுப்பும் பணியை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான வளர்மதி துவக்கி வைத்தார்.
குறிப்பாக அரக்கோணம் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்கு 1457 VVPAT, 1342 கண்ட்ரோல் யூனிட், 1342 பேலட் யூனிட் ஆகியவை அனுப்பும் பணி நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார்.
மேலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகள் முழுமையாக வாக்களிக்க வலியுறுத்தும் வகையில் மூன்று சக்கர பேரணியை தேர்தல் நடத்தும் அலுவலர் துவக்கி வைத்தார் இந்தப் பேரணியில் மாற்றுத்திறனாளிகள் வாக்களிப்பது எனது கடமை, நூறு சதவீதம் வாக்களிப்பேன், என் வாழ்க்கை விற்பனை செய்யமாட்டேன் உள்ளிட்ட பல்வேறு பதாகைகளை வைத்துக் கொண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முதல் முத்துக்கடை பேருந்து நிலைய வரை முக்கிய வீதி வழியாகப் பேரணி நடைபெற்றது.




