
சென்னையில் நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் நடவடிக்கையை எதிர்ப்பது ஏன்? என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை தியாகராயா நகரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு, 64 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், 21 கட்சிகள் பங்கேற்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
இதில், தவெக, பாமக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் கூட்டத்தை புறக்கணித்தன. இந்நிலையில், அனைத்துக் கட்சி கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் நடவடிக்கைகை எதிர்ப்பது ஏன்? என விளக்கம் அளித்தார்.
நேர்மையான தேர்தல் நடத்த உண்மையான வாக்காளர் பட்டியல் அவசியம் என்பதை யாரும் மறுக்கவில்லை. ஆனால் அதற்கு உரிய கால அவகாசத்தை கொடுக்க வேண்டும்.
அதைவிடுத்து தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு முழுமையான திருத்த பணிகளை செய்ய நினைப்பது உண்மையான வாக்காளர்களை நீக்கும் தந்திரம் மட்டுமே.
மக்கள் வாக்குரிமையை பறிக்கும் விதமாகவும் அவர்களை அச்சுறுத்தும் விதமாகவும் பீகாரில் வாக்களார் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் நடைபெற்றது.
அது போல தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களிலும் நடைபெற உள்ளதால், இதற்கு எதிராக தமிழ்நாடு தனது எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டியது முக்கிய தேவையாக உள்ளது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.



