
விழுப்புரம் மாவட்டம் பெரப்பேரியைச் சேர்ந்த 35 வயதான தியாகராஜன் என்பவர் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். ஐதராபாத்தில் வேலை செய்து வந்த அவர், கொரோனா பாதிப்பு காரணமாக சொந்த ஊர் திரும்பி இருக்கிறார். இதன் பிறகு சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கிறார்.
நாடு முழுவதும் மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. கேரளா, மேற்கு வங்கம், தமிழ்நாடு, டெல்லி என்று ஏராளமான மாநிலங்களில் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்து வருகிறது. LF 7 மற்றும் NB.1.8.1. என்ற புதிய வகை கொரோனா வைரஸ் பரவல் வேகமாக பரவி வருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்திருக்கிறது.
இந்த வகை கொரோனா வைரஸால் பெரியளவில் பாதிப்பு இருக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று ஒருநாள் மட்டும் 498 பேருக்கு கொரோனா பரவல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இதுவரை மொத்தமாக 5,364 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
தற்போது கர்ப்பிணிகள் முகக்கவசம் அணிய வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. காய்ச்சல், இருமல், உடல் வலி இருந்தால் கர்ப்பிணிகள் முன்கூட்டியே மருத்துவமனைக்கு செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் விழுப்புரத்தில் கொரோனா வைரஸ் பரவலால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த 35 வயதான தியாகராஜன் என்பவர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



