குற்றப்பத்திரிக்கையில் விஜய் பெயர்: தெரியாது தெரியாது என்று பதில்..!

Advertisements
கரூர் சம்பவம் தொடர்பாக டெல்லி நடத்தும் சிபிஐ விசாரணையில் தமிழக வெற்றி கழகத் தலைவர் நடிகர் விஜய் பெயர் குற்ற பத்திரிகையில் இணைக்கப்பட்டிருப்பது புதிய பரபரப்பு செய்தியாக பார்க்கப்படுகிறது . சிபிஐ கேட்ட 100 கேள்விகளில் பெரும்பாலான கேள்விகளுக்கு தெரியாது என்றும் தவறாகவும் பதில் அளித்து இருக்கிறார் விஜய் .
இதனைத் தொடர்ந்து அவர் தனக்கு நெருக்கமானவர்களிடம் மிகவும் வேதனையுடன் பல தகவல்களை பேசி இருக்கிறார். தமிழக வெற்றி கழகம் என்ற புதிய அரசியல் கட்சியை தொடங்கிய நடிகர் விஜய் விக்கிரவாண்டி மதுரையை அடுத்து நாமக்கல் கரூர் என பல பகுதிகளில் தேர்தல் பரப்புரையை மேற்கொண்டார் .
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கரூரில் அவர் தேர்தல் பிரச்சாரம் செய்த போது எதிர்பாராத விதமாக கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தார்கள் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தார்கள். இந்த நிலையில்,  இது தொடர்பாக தமிழக காவல்துறை விசாரணையை மேற்கொண்டது . ஆனால் தமிழக காவல்துறை விசாரணை செய்தால் நேர்மையாக இருக்காது எனவே சிபிஐ விசாரிக்க வேண்டும் என நடிகர் விஜய் தரப்பில் குரல் கொடுக்கப்பட்டது .
இதனிடையே , இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ தனது விசாரணையை தொடங்கியது.  கரூரில் கூட்டம் நடந்த பகுதியில் இருந்து தனது விசாரணையை தொடங்கியது சிபிஐ . இதில் தமிழக வெற்றிக்கழக பொதுச்செயலாளர் புசிஆனந்த்,  ஆதவ் அர்ஜுன்,  நிர்மல் குமார்,  கரூர் மாவட்ட செயலாளர் மகேந்திரன் ஆகியோரை முதல் கட்ட விசாரணைக்கு டெல்லிக்கு அழைத்து தீவிர விசாரணை நடத்தப்பட்டது .
இதன் பின்னர் ,  நடிகர் விஜய் டெல்லிக்கு அழைக்கப்பட்டார் . அப்பொழுது அவரிடம் ஏராளமான கேள்விகள் கேட்கப்பட்டன.  இதில் பெரும்பாலான கேள்விகளுக்கு குளறுபடியாக விஜய் பதில் சொல்லி இருக்கிறார் . அவர் சொன்ன பதிலுக்கும் கட்சி நிர்வாகிகள் சொன்ன பதிலுக்கும் கார் டிரைவர் சொன்ன பதிலுக்கும் நிறைய வேறுபாடுகள் காணப்பட்டன .
இதனைதொடர்ந்து,  தற்பொழுது இரண்டாவது கட்டமாக நடிகர் விஜய் டெல்லிக்கு அழைக்கப்பட்டார் . தற்பொழுது நடைபெற்ற விசாரணையில் நடிகர் விஜய் இடம் 100 கேள்விகள் கேட்கப்பட்டன. இவை அனைத்திற்கும் சிபிஐ அதிகாரிகள் மத்தியில் ஆங்கிலத்தில் நடிகர் விஜய் பதிலளித்தார் . மொத்தம் இரண்டு நாட்கள் 15 மணி நேரம் இந்த விசாரணை நீடித்தது .
அப்பொழுது, சிபிஐ அதிகாரிகள் கரூருக்கு நீங்கள் வருவதற்கு ஏன் 7 மணி நேரம் காலதாமதம் ஆனது என கேள்வி கேட்டனர் . இதற்கு பதில் தெரிவித்த நடிகர் விஜய் சாலைகள் எல்லாம் வளைவும் நெளிவுமாக இருந்தன என்று பதிலளித்திருக்கிறார் . ஆனால் விஜய் பயணம் செய்தது தேசிய நெடுஞ்சாலை ஆகும்.  அங்கு பெரிய வளைவுகள் எதுவும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது .
இதனை தொடர்ந்து,  நடிகர் விஜய் இடம் சிபிஐ அதிகாரிகள் ஏராளமான கிடுக்கிப்பிடி கேள்விகள் கேட்டனர் . அவர்கள் கேட்கும் பொழுது உங்கள் வாகனம் இடையில் ஒரு மணி நேரம் நின்று இருக்கிறது.  உங்களுடைய கைபேசி சாட்டிலைட் தகவல்கள் இதனை எங்களுக்கு உறுதி செய்திருக்கின்றன.  உங்கள் வாகனம் ஒரு மணி நேரம் நின்ற இடத்தில் நீங்கள் பலருடன் போனில் பேசி உள்ளீர்கள்.  அதற்கான சான்றுகள் உள்ளன .
அந்த ஒரு மணி நேரம் எதற்காக வாகனத்தை நிறுத்தி இருந்தீர்கள் எங்கே இருந்தீர்கள் என சிபிஐ அதிகாரிகள் கேள்வி கேட்டுள்ளனர் . விஜய்யிடம் மொத்தம் 100 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.  அதனை தொடர்ந்து குறுக்கு விசாரணை நடத்தப்பட்டது இவை அனைத்துக்கும் நடிகர் விஜய் ஆங்கிலத்தில் பதில் அளித்துள்ளார் .
சிபிஐ அதிகாரிகள் மேலும் கேள்வி கேட்கும் பொழுது கூட்டம் அதிகமாக இருந்தும் கூட நீங்கள் ஏன் பேச்சை தொடர்ந்தீர்கள் ?நீங்கள் சம்பவ இடத்தில் காவல்துறை சொன்னதை கேட்டீர்களா? போலீசார் உங்களிடம் கேட்டுச் சில விஷயங்களை நீங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பது உண்மையா ?உங்களுக்கு பேச அனுமதி அளிக்கப்பட்ட நேரம் என்ன? நீங்கள் பேசியநேரம் என்ன? பலர் இறந்து போன நிகழ்வு உங்களுக்கு தெரியுமா? எதற்காக அவசர அவசரமாக அங்கிருந்து சென்னைக்கு கிளம்பினீர்கள் என்றெல்லாம் கேள்வி கேட்டுள்ளனர் .
இது குறித்து,  விஜய் பதில் சொல்லும் பொழுது தமிழக அரசு சரியான பாதுகாப்பு தரவில்லை காவல்துறையினர் கூட்டத்தை கட்டுப்படுத்தவில்லை என்பதை தவிர சரியான பதில்கள் எதையும் சொல்லவில்லை.  சிபிஐ கேட்ட பெரும்பாலான கேள்விகளுக்கு தனக்கு தெரியாது தெரியாது என்றே பதில் அளித்து உள்ளார் .
இதனிடையே நடிகர் விஜய் மீது சில குற்றங்கள் இருப்பதாக கருதி சிபிஐ போலீசார் குற்றப்பத்திரிக்கையில் அவரது பெயரை சேர்க்க முடிவு செய்திருப்பதாக தெரிகிறது.
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *