
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 234 தொகுதிகளிலும் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 தேர்வில் சாதனை படைத்த மாணவ-மாணவிகளுக்கு ஊக்கப்பரிசு வழங்கும் விழா இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. இன்று மற்றும் வருகிற 3-ந்தேதி என இரண்டு கட்டங்களாக விழா நடைபெறுகிறது.
விழாவில் பங்கேற்கும் மாணவர்கள் செல்போன், பேப்பர், பேனா, இதர பொருட்கள் எடுத்து வர அனுமதி இல்லை. நுழைவு கூப்பனில் உள்ள நபர்கள் மட்டுமே அரங்கிற்குள் அனுமதிக்கப்படுவார்கள் எனப் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.
முதற்கட்டமாக, இன்று 800-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு ஊக்கப்பரிசு வழங்கிக் கௌரவிக்கப்படுகின்றனர்.
போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காகவும், நிகழ்ச்சியை விரைந்து முடிப்பதற்காகவும் விஜய் அதிகாலையிலேயே விழா நடைபெறும் அரங்கிற்கு வந்தார். இதனையடுத்து விழாவிற்கு வந்திருந்த மாணவர்கள் மற்றும் அவர்களுடன் வந்த பெற்றோருக்குக் காலை உணவு வழங்கப்பட்டது. பின்பு அவர்களுக்கான இருக்கையில் அமர வைக்கப்பட்டனர்.
இதன்பின்னர் சுமார் 10 மணியளவில் த.வெ.க. தலைவர் விஜய் அரங்கிற்குள் வந்தார். அப்போது அங்கு இருந்த மாணவர்கள் கரகோஷம் எழுப்பி உற்சாகம் அடைந்தனர். இதன்பின் மாணவர்களின் மத்தியில் அமர்ந்த விஜய் அவர்களுடன் கலந்துரையாடி புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
இதைத் தொடர்ந்து மாணவ, மாணவிகளுக்கு மேடையில் தனித்தனியாகச் சான்றிதழ் வழங்கினார். சாதனை படைத்த மாணவ, மாணவிகளுக்குப் பொன்னாடை போர்த்தி சான்றிதழ் வழங்கிக் குடும்பத்துடன் எடுத்துக்கொண்டார். அப்போது, விழாவிற்கு வந்திருந்த மாணவர்கள் நன்றி தெரிவித்து பேசினர்.


