
திமுக, பாஜக ஆகியவற்றின் அரசியல் ஆதாய நாடகத்தைத் தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள் என்று தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள அறிக்கையில், மாபெரும் யானைப்படை, கடற்படையைக் கட்டமைத்திருந்த வீறுமிகுந்த சோழப் பேரரசால் அமைக்கப்பட்டு இன்றளவும் தமிழ் மண்ணுக்கும் தமிழகத்துக்கும் தனிப்பெரும் அடையாளமாக இருக்கும் கங்கைகொண்ட சோழபுரத்துக்கு வந்த பிரதமர் ராஜராஜ சோழனுக்கும், ராஜேந்திர சோழனுக்கும் சிலைகள் அமைக்கப்படும் என்று பேசிதைக் குறிப்பிட்டுள்ளார்.
75 ஆண்டுகளைக் கடந்த கட்சி என்று கூறிக்கொள்ளும் திமுக தமிழர் அடையாளம் என்றாலே அது தங்களுக்கு மட்டுமே உரியது என்பது போலப் பொய்யாக மார்தட்டி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
சோழப் பேரரசின் பெருமையைக் கொண்டாட வேண்டியது தங்கள் கடமை என்பதை மறந்து மத்திய பாஜகவிடம் அடைக்கலம் புகுந்து தமிழகத்தை அடகு வைத்தது போலவே இப்போது தமிழர்களின் பெருமையையும் திமுக அரசு அடகு வைத்துள்ளதாக விஜய் குறிப்பிட்டுள்ளார்.


