Kovilpatti Railway Station: ஒன்லி இந்தி தான்.. டிக்கெட் எடுக்க முடியாமல் தவிக்கும் பயணிகள்!

Advertisements

கோவில்பட்டி ரயில் நிலையத்தில் தட்கல் பயணச்சீட்டு வழங்கும் பகுதியில் ரயில்வே ஊழியருக்கு இந்தி தவிர்த்துத் தமிழ், ஆங்கிலம் என வேறு எந்த மொழியும் தெரியாததால் பயணச்சீட்டு எடுக்க முடியாமல் பயணிகள் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செயல்பட்டு வரும் ரயில் நிலையம் மதுரை ரெயில்வே கோட்டத்தில் அதிக வருவாய் தரும் ரயில் நிலையங்களில் ஒன்றாகச் செயல்பட்டு வருகிறது. கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்கள் மட்டுமின்றி தூத்துக்குடி, நெல்லை மாவட்டம், விருதுநகர் மாவட்டம், தென்காசி மாவட்டம் என 4 மாவட்ட மக்கள் கோவில்பட்டி ரெயில்வே நிலையத்தினை பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக ரெயில் பயணிகள் கட்டணத்தில் அதிகளவில் கோவில்பட்டி ரெயில்வே நிலையம் வருமானத்தினை ஈட்டி வருகிறது.

இவ்வாறு அதிகமாக மக்கள் வரும் ரெயில்வே நிலையத்தில் முன்பதிவு செய்ய மற்றும் முன்பதிவு இல்லாத டிக்கெட் பெற ஒரு கவுண்டர் தான் செயல்பட்டு வருகிறது. இதனை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கைகுறித்து பலமுறை வலியுறுத்தியும் நடவடிக்கை எடுக்கவில்லையெனக் கூறப்படுகிறது. இது ஒரு புறம் இருக்க அந்த ஒரே ஒரு கவுண்டரில் வடமாநிலத்தினை சேர்ந்த பணியாளர்கள் தான் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்றும் வழக்கம்போல வடமாநிலத்தினை சேர்ந்த பணியாளர் கவுண்டரில் இருந்துள்ளார். அவருக்குத் தமிழ், ஆங்கிலம் என இந்தி தவிர்த்து வேறு எந்த மொழியும் தெரியவில்லை என்று கூறப்படுகிறது. ஹிந்தி மட்டுமே தெரியும் என்பதால் டிக்கெட் எடுக்க வந்தவர்கள், தட்கல் மூலமாக டிக்கெட் முன் பதிவு செய்ய வந்தவர்கள் கூறிய விபரங்களைப் புரிந்து கொள்ள முடியமால் அந்தப் பணியாளர் பரிதவித்து மட்டுமின்றி, ஹிந்தியில் பேசினால் மட்டும் தான் விரைந்து தன்னால் டிக்கெட் கொடுக்க முடியும், இல்லை என்றால் மெதுவாகத் தான்  தருவேன் என்று கூறியுள்ளார்.

இதனால் தட்கலில் முன்பதிவு செய்ய வந்தவர்கள் பரிதவித்துள்ளனர். மேலும் முன்பதிவு இல்லாத  டிக்கெட் எடுக்க வந்தவர்களும் சிரமம் அடைந்துள்ளனர். 30 நிமிடம் முதல் 45நிமிடம் வரை டிக்கெட் எடுக்க நேரமானதால் ஆத்திரமடைந்த பயணிகள் அங்குள்ள ஊழியருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் ரெயில்வே நிலைய போலீசார் மற்றும் கிழக்கு காவல்நிலைய போலீசார் வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதுகுறித்து நிலைய மேலாளரிடம் புகார் கொடுங்கள் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் நிலைய மேலாளர் அலுவலகம் சென்று புகார் கொடுக்கச் சென்றபோது அங்குப் பணியில் இருந்த ஊழியர் அலட்சியமாகப் பதில் கூறியதால் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையெடுத்து போலீசார் இருதரப்பினையும் சமதானப்படுத்தி புகார் அளிக்குமாறு கூறினர். அடுத்தடுத்து நடைபெற்ற இந்தப் பிரச்சினையினால் ரெயில்வே நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஒரு கவுண்டர் தான் செயல்படுகிறது. அந்தக் கவுண்டரிலும் தமிழ், ஆங்கிலம் தெரியாத நபர்களைப் பணியில் ஈடுபடுத்தி வருகின்றனர். ஹிந்தி மட்டும் அவர்களுக்குத் தெரிவதால், தமிழ், ஆங்கிலத்தில் பேசினால் புரியவில்லை என்று கூறி டிக்கெட்  தர மறுப்பது மட்டுமின்றி, அப்படியே தந்தாலும் நீண்ட நேரம் காக்க வைத்து டிக்கெட் வழங்கி வருவதாகவும், குறிப்பாகத் தட்கல் முறையில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாத சூழ்நிலை ஏற்படுவதாகவும், திருநெல்வேலிக்கு டிக்கெட் கேட்டால் திண்டுக்கலுக்கு டிக்கெட் வழங்கிவிடுவதாகவும், ஒன்று தமிழ் அல்லது ஆங்கிலம் தெரிந்த ஊழியரைப் பணியில் அமர்த்த வேண்டும், இல்லை, தமிழ் தெரிந்த பணியாளரை உதவிக்கு அமர்த்த வேண்டும், இதனால் சரியான நேரத்தில் டிக்கெட் எடுக்க முடியாத நிலை இருப்பதாக ரெயில் பயணிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *