V. Narayanasamy:தேர்தலில் தோற்ற பின்பும் ஆட்சியாளர்களிடம் மாற்றம் வரவில்லை; அனைத்து துறைகளிலும் ஊழல்!

Advertisements

நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியுற்ற பின்னரும் ஆட்சியாளர்களிடம் மாற்றம் வரவில்லை என்று குற்றம் சாட்டியுள்ள புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி, அனைத்து துறைகளிலும் ஊழல் நடைபெறுவதாகத் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், நீட் தேர்வில் ஊழல் நடந்துள்ளது. ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் பணம் கைமாறியுள்ளது என மத்திய அரசின் விசாரணையில் தெரியவந்துள்ளது. இது ஒரு இமாலய ஊழல். இதனால் மாணவர்களின் கனவு தகர்த்தப்பட்டுள்ளது. பிரதமர் மோடி இதுவரை நீட் தேர்வு தொடர்பாக எதுவும் தெரிவிக்கவில்லை.

மோடி அரசு மாணவர்களை உதாசீனமாக நினைத்து இதற்குப் பதில் சொல்லாமல் ராகுல்காந்தி பேசும்போது எதிர்கட்சிக்குக் கொடுக்க வேண்டிய மரியாதையை கொடுக்காமல் அவரது மைக்கை ஆப் செய்கின்றனர். மேலும் புதுச்சேரி நகர வளர்ச்சி குழுவின் மேல்முறையீட்டு கூட்டம், வணிக வரி வளாகத்தில் கடந்த 4 தினங்களுக்கு முன்பு அதன் தலைவரான முதலமைச்சர் தலைமையில் நடந்துள்ளது.

விதிமுறைகளை மீறிக் கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு விதிமுறைகளை மீறி அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதற்கு எப்படி அனுமதி வழங்கப்பட்டது என முதலமைச்சர் ரங்கசாமி தெரிவிக்க வேண்டும். பாராளுமன்ற தேர்தலில் தோல்வியுற்ற பிறகும் ஆட்சியாளர்கள் மாறவில்லை. தொடர்ந்து அனைத்து துறைகளிலும் ஊழல் நடந்து வருகிறது. முதலமைச்சர் ரங்கசாமி இதோடு தனது அரசியல் வாழ்க்கையை முடித்துகொள்ள வேண்டும் என்பதற்காக அனைத்து புரோக்கர்களுக்கும் அனுமதி கொடுக்கிறார்.

புதுச்சேரி சரித்திரத்தில் எந்த அமைச்சரும் தற்போது உள்ள உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் போல் அதிகமாக வெளிநாடு சென்றதில்லை. அவரது துறையில் அவர் கவனம் செலுத்துவதில்லை. காவல்துறை அவரது கட்டுப்பாட்டில் இல்லை. சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது குறித்தும் அவருக்குக் கவலை இல்லை. புதுச்சேரி பாஜக ஆட்சி மக்கள் விரோத ஆட்சியாகச் செயல்படுகிறது எனக் குற்றம் சாட்டியுள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *