
உத்தரப்பிரதேச மாநிலம் கவுசாம்பி மாவட்டத்தில் தேர்ஹா என்ற கிராமத்தில் பட்டப்பகலில் 19 வயது பெண்ணை, பாலியல் பலாத்காரம் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட நபர் உட்பட இரண்டு சகோதரர்கள் வெட்டிக் கொலை செய்துள்ளனர்.
ஒரே சமூகத்தைச் சேர்ந்த இரு தரப்பினருக்கும் இடையே பழைய விரோதம் இருந்து வந்துள்ளது. அது மட்டுமல்லாது பாலியல் வன்முறை வழக்கும் இருந்த நிலையில் இரு தரப்பினருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட சிறுமியைத் துரத்திச் சென்று துடிதுடிக்கப் பட்டப் பகலில் கோடரியால் வெட்டிக் கொன்றுள்ளனர். கொலையாளிகளான அசோக் மற்றும் பவன் நிஷாத் ஆகியோர் சில நாட்களுக்கு முன்பு ஜாமீனில் விடுவிக்கப்பட்டதாகப் போலீசார் தெரிவித்தனர்.
பெண் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பவன் நிஷாத் தன்னை மைனராக இருந்தபோது பாலியல் பலாத்காரம் செய்ததாகக் குற்றம் சாட்டியதாகப் போலீசார் தெரிவித்தனர். இது தொடர்பான வழக்கு நிலுவையில் இருந்துள்ளது. பவன் மற்றும் அவரது நண்பர்கள் அந்த வழக்கை வாபஸ் பெற வற்புறுத்தியதாகக் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் அதற்கான சந்தர்ப்பம் வரும் வரை காத்திருந்துள்ளனர். சம்பவத்தன்று கொலை செய்யப்பட்டு இறந்த பெண் அருகில் உள்ள வயலில் கால்நடைகளை மேய்த்து விட்டுத் திரும்பிக் கொண்டிருந்தபோது அவரைப் பவன் மற்றும் அவன் சகோதரர்கள் சுற்றி வளைத்துக் கோடரியால் வெட்டிக் கொலை செய்ததாகப் போலீசார் தெரிவித்தனர். பவன் மற்றும் அசோக் நிஷாத் ஆகியோர் தற்போது தலைமறைவாக உள்ளனர் என்று காவல் கண்காணிப்பாளர் கவுசாம்பி கூறினார்.
தேர்ஹா கிராமத்தில் நடந்த இந்தக் கொடூர சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர், குற்றம் சாட்டப்பட்டவர்களை கைது செய்யத் தனிபடை அமைத்துள்ளனர் என்று காவல் அதிகாரி ஸ்ரீவஸ்தவா கூறினார்.
இந்தக் கொலை சம்பவம் பாஜக ஆளும் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எதிர்க்கட்சியான காங்கிரஸின் மாநில அலுவலகம் எக்ஸ் தளத்தில் ஒரு சுருக்கமான வீடியோவை வெளியிட்டது, அதில் போலீசார் பெண்ணின் உடலை மறைப்பதைக் காட்டுகிறது. கௌசாம்பியில், இரண்டு மிருகங்கள் ஒரு பெண்ணைக் கோடாரியால் வெட்டிக் கொன்றன.
ஒரு குற்றவாளி வெளியே வந்திருந்தார். உ.பி.யில் உள்ள மிருகங்களுக்குச் சட்டத்தின் மீது எந்தப் பயமும் இல்லை… மரியாதை இல்லை. இங்கு, பெண்கள் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர். எதிர்க்கட்சிகள் தங்கள் பதிவில், ‘இருண்ட நகரத்தின் இந்த இருள் எப்போது நீங்கும்?’ என்று குறிப்பிட்டுள்ளார்.
தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் தரவுகளின்படி, உ.பி.யில் 2021 ஆம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான 56,000 க்கும் மேற்பட்ட குற்றங்கள் பதிவாகியுள்ளன. கற்பழிப்பு, கற்பழிப்பு மற்றும் கொலை மற்றும் ஆசிட் வீச்சு ஆகியவை இதில் அடங்கும் என்று அறிவித்துள்ளனர்.

