
பசுமை மின்சாரம் என்கிற பெயரில் இயற்கை வளங்களை அழிக்கக் கூடாது என்று தெரிவித்துள்ள சீமான், கல்லத்திக்குளம் சூரிய மின் ஆற்றல் திட்டத்தை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும் எனக் கோரியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தென்காசி மாவட்டம், ஆலங்குளம் வட்டம், மாறாந்தை ஊராட்சி, கல்லத்திக்குளத்தில் VC Green Energy Pvt. Ltd. மற்றும் அதன் துணை நிறுவனங்களால் திட்டமிடப்பட்டுள்ள பெரிய அளவிலான சூரிய மின் உற்பத்தித் திட்டம், மரங்களின் கொடூர அழிப்பாக மாறியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
264 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலப்பரப்பில் 10 இலட்சம் மரங்களை வெட்டி அழிக்கும் இந்தத் திட்டம், அங்கிருக்கக்கூடிய பொதுமக்கள் மற்றும் வேளாண் குடிகளின் வாழ்வாதாரத்தைச் சிதைத்து, சுற்றுச்சூழலை அழித்து, உயிரினங்களை அழிவுக்குத் தள்ளுவதாகத் தெரிவித்துள்ளார்.
இப்பகுதி மலைப்புறப் பகுதியாக வரையறுக்கப்பட்டுள்ள நிலையில் இத்தனை மரங்களைக் கொண்ட இந்நிலத்தை மறுவகைப்படுத்துதலுக்கு அனுமதித்தது தவறு எனச் சுட்டிக்காட்டியுள்ளார்.
மா, பலா, சப்போட்டா, முந்திரி வகைகள் அடங்கிய பத்து இலட்சம் மரங்கள் ஒரே நேரத்தில் அழிக்கப்படுவதால், இப்பகுதியில் சூழலியல் மாற்றம் தீவிரமாகும் எனத் தெரிவித்துள்ளார்.
இங்கு வாழும் மான், காட்டுப்பன்றி, மயில், உடும்பு போன்ற உயிரினங்கள் வாழிடத்தை இழக்கும் என்றும் கவலை தெரிவித்துள்ளார்.


