
சபரிவர்மன் எனும் சாமானியருக்கு ஒரு சட்டம், த.வெ.க நிர்வாகி என்றால் வேறொரு சட்டம் என்னும் காவல்துறையின் போக்குக் கண்டிக்கத்தக்கது என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நாகர்கோவிலைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி இளைஞரான சபரிவர்மன் காவல்துறையால் கைது செய்யப்பட்ட நிலையில் நீதிமன்றக்காவலில் மரணம் அடைந்து இருப்பது அறிந்து தான் அதிர்ச்சியடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். காவல்துறையைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதலமைச்சர் இதற்கு உரிய பதில் சொல்ல வேண்டும் என்று வினவியுள்ளார்.
சபரிவர்மனின் கடையில் குட்கா பறிமுதல் செய்யப்பட்டதாக, அவரை கைது செய்த காவல்துறையினர், ஈரோட்டில் குட்கா விற்றதாகக் கைது செய்யப்பட்ட த.வெ.க. நிர்வாகி அருணை அன்றே சொந்த ஜாமினில் விடுவித்துள்ளதாகக் குற்றம்சாட்டியுள்ளார். சபரிவர்மன் எனும் சாமானியருக்கு ஒரு சட்டம், த.வெ.க நிர்வாகி என்றால் வேறொரு சட்டம் என்னும் காவல்துறையின் போக்குக் கண்டிக்கத்தக்கது என்று தெரிவித்துள்ளார். இந்தச்சம்பவத்தில் தொடர்புடைய காவலர்கள் மீது தக்க நடவடிக்கை எடுப்பதோடு, சபரிவர்மனின் மரணத்திற்குக் காரணமானவர்களுக்கு உரிய தண்டனையைப் பெற்றுத்தர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.



