
நாகர்கோவில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த மாற்றுத்திறனாளி சபரிநாதன் கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்
பா.ம.க. தலைவர் அன்புமணி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், நாகர்கோவில் கிளைச்சிறையில் அடைக்கப்பட்டிருந்த மாற்றுத்திறனாளி சபரிநாதன், சிறைக்காவலர்களால் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டு உயிர்பறிப்பு செய்யப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
சபரிநாதனுக்கு இழைக்கப்பட்ட கொடூரம் மன்னிக்க முடியாதது என்று குறிப்பிட்டுள்ளார். அதிமுக ஆட்சியில் சாத்தான்குளம் பெனிக்ஸ், ஜெயராஜ், திமுக ஆட்சியில் மடப்புரம் அஜித்குமார் வரிசையில் தவெக ஆட்சியில் சபரிநாதனின் படுகொலை நிகழ்த்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கும் சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட வேண்டும் என்றும் கைது செய்யப்பட்ட சிறைக் காவலர்களுக்கு வழக்கின் விசாரணை முடியும் வரை பிணை மறுக்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டு கொண்டுள்ளார்.
கொடூரமாக கொல்லப்பட்ட சபரிநாதனின் குடும்பத்தினருக்கு 50 லட்சம் ரூபாய் இழப்பீடும், அவரது மனைவிக்கு அரசு வேலையும் வழங்கவும் தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்.



