
பொதுப்பட்டியலில் இருக்கும் கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வர வேண்டும் என்று தமிழகத் துணை முதலமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார்.
சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூலகத்தில் மாநிலக் கல்விக் கொள்கை வெளியீட்டு விழா நடைபெற்றது. மாநிலக் கல்விக் கொள்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி, ஒரு காலத்தில் மாநிலப் பட்டியலில் இருந்த கல்வி, நெருக்கடி நிலைக் காலத்தில் பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்டதாகத் தெரிவித்தார். அதை மீண்டும் மாநிலப் பட்டியலுக்குக் கொண்டுவர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
தமிழ்நாட்டில் கல்வியை அழிக்க மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொள்வதாக உதயநிதி குற்றஞ்சாட்டினார். இராஜாஜி ஆட்சியில் குலக்கல்வித் திட்டம் கொண்டுவர இருந்ததைப் பெரியார் கடுமையாக எதிர்த்ததாகவும், இப்போது தேசியக் கல்விக்கொள்கை என்னும் பெயரில் அதை மீண்டும் கொண்டுவர மத்திய அரசு முயல்வதாகவும் உதயநிதி தெரிவித்தார்.


