Udhayanidhi Stalin:ஆக.,19ல் துணை முதல்வராகிறார்? பவுர்ணமி தினமாகப் பார்த்துப் பதவியேற்கிறாரோ!

Advertisements

ராமநாதபுரம்: வரும் ஆகஸ்ட் 19ம் தேதி அமைச்சர் உதயநிதி, துணை முதல்வர் ஆகிறாரென அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறியுள்ளார். பகுத்தறிவு பேசும் திமுக, பவுர்ணமி தினமான அன்று உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்குவது கொள்கை முரணமாக உள்ளதாகப் பலரும் கருத்து தெரிவிக்கின்றனர்.

முதல்வர் ஸ்டாலினின் மகனும், அமைச்சருமான உதயநிதியை துணை முதல்வராக்க திமுக., அமைச்சர்கள் பலரும் விரும்புகின்றனர். அதன் வெளிப்பாடாக அவ்வப்போது தங்களது ‘ஆசைகளை’ வெளிப்படுத்தி வந்தனர். இதுபற்றி முதல்வர் ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, ”உதயநிதியை துணை முதல்வராக்கும் கோரிக்கை வலுத்திருக்கிறது, ஆனால் பழுக்கவில்லை” எனப் பதிலளித்தார்.

இந்த நிலையில், ராமநாதபுரத்தில் நடந்த ‘தமிழ்ப்புதல்வன்’ திட்டத் துவக்க விழாவில் பங்கேற்ற அமைச்சர் ராஜ கண்ணப்பன், மேடையில் மாணவர்கள் மத்தியில் பேசும்போது, ‘துணை முதல்வர் உதயநிதி’ எனக் கூறிவிட்டு, அடுத்த நொடியே, ‘சாரி, ஆகஸ்ட் 19ம் தேதிக்கப் பிறகுதான் துணை முதல்வராவார்; அதற்கு முன்னாடி அப்படி சொல்லக் கூடாது’ எனக் கூறி சமாளித்தார். இந்த வீடியோ வைரலாகப் பரவி வருகிறது.

பவுர்ணமி தினம்
ஆக.,19ல் உதயநிதி துணை முதல்வராகிறாரென அமைச்சர் ராஜ கண்ணப்பன் கூறியதையடுத்து, அவருக்குப் பதவி கிடைப்பது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது. அன்றைய தினம் பவுர்ணமி என்பதால், நல்ல நாளாகப் பார்த்துப் பதவியேற்கிறாரெனப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஏற்கனவே சுபமுகூர்த்த தினமான டிச.,14, 2022ல் புதன்கிழமையாகப் பார்த்து, நல்ல நேரத்தில் (காலை 9:28) உதயநிதி அமைச்சராகப் பொறுப்பேற்றார். பகுத்தறிவு பேசும் திமுக, பதவியேற்பு உள்ளிட்ட முக்கிய விஷயங்களுக்கு நல்ல நேரம், நல்ல நாள் பார்த்துச் செயல்படுவது கொள்கை முரணாக இருப்பதாகவும் சிலர் தெரிவிக்கின்றனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *