
வாஷிங்டன்:
”சிரியா அதிபர் ஆசாத் நாட்டை விட்டுத் தப்பியோடிய நிலையில், உக்ரைன் மீதான போரை ரஷ்யா அதிபர் புடின் முடிவுக்குக் கொண்டு வர வேண்டும், ” என அமெரிக்க அதிபராகப் பதவியேற்க உள்ள டிரம்ப் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: ஆசாத் சிரியாவிலிருந்து தப்பிச் சென்றுவிட்டார். இதுவரை அவரைப் பாதுகாத்து வந்த புடின் தலைமையிலான ரஷ்யா, அவரைப் பாதுகாக்கவில்லை. சிரியா மீதான ஆர்வத்தை ரஷ்யா விட்டுவிட்டது. உக்ரைன் போர் காரணமாக ரஷ்யாவில் உயிரிழப்பு மற்றும் காயமடைந்தவர்கள் எண்ணிக்கை ஆறு லட்சத்தைத் தாண்டி உள்ளது. இந்தப் போர் துவங்கி இருக்கக் கூடாது. இத்தனை நாட்கள் நீடிக்கவும் கூடாது.
உக்ரைன் போர் மற்றும் மோசமான பொருளாதாரம் காரணமாக ரஷ்யா பலவீனமாக உள்ளது. இஸ்ரேல் தாக்குதல் மற்றும் அதன் வெற்றி காரணமாக ஈரானும் பலவீனமாக உள்ளது. போரை நிறுத்த ஜெலன்ஸ்கியும் உக்ரைனும் ஒப்பந்தம் போட வேண்டும். அவர்கள் ராணுவ வீரர்கள் மற்றும் சிவிலியன்கள் என நான்கு லட்சம் பேரை இழந்துள்ளனர். அங்கு உடனடியாகப் போரை நிறுத்திப் பேச்சுவார்த்தையை ஆரம்பிக்க வேண்டும்.
தேவை இல்லாமல் ஏராளமான உயிர்கள் வீணாகி உள்ளன. பல குடும்பங்கள் சிதைந்துள்ளன. இது தொடர்ந்தால், நிலைமை இன்னும் மோசமாகத் தான் அமையும். புடினை எனக்கு நன்கு தெரியும். அவர் செயல்பட வேண்டிய நேரம் இது. இதற்குச் சீனா உதவலாம். உலகம் உற்று கவனிக்கிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் டிரம்ப் கூறியுள்ளார்.


