
லியோ படத்திற்கு வெற்றி விழா நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள லியோ படம் கடந்த 19ம் தேதி திரைக்கு வந்தது. இதில் விஜய்யுடன் இணைந்து த்ரிஷா, சஞ்சய் தத், மிஷ்கின், கவுதம் மேனன், அர்ஜூன் என பலர் நடித்துள்ள லியோ படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்துள்ளன. முதல் பாதி விறு விறுப்பாகவும், இரண்டாம் பாதி ஃபிளாஷ்மேக் காட்சிகளுடம் இடம்பெற்றிருந்தாலும், விஜய்யின் நடிப்பை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
தொடர் விடுமுறை நாட்களின் போது லியோ வெளியானதால் பாக்ஸ் ஆபிசிலும் கலெக்ஷனை குவித்தது. தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியான லியோ படம் முதல் வாரத்தில் ரூ.148 கோடியும், முதல் வாரத்தின் இறுதியில் ரூ. 461 கோடிகளுக்கும் மேல் பாக்ஸ் ஆபிசில் வசூலித்துள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ அதிகாரப்பூர்வமாக அறிவிருந்தது.
இந்த நிலையில் லியோ படத்தின் வரவேற்புக்கு வெற்றி விழா கொண்டாட படக்குழு திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. நவம்பர் ஒன்றாம் 1ம் தேதி லியோ படத்தின் வெற்றி விழாவை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடத்த படக்குழு ஏற்பாடு செய்துள்ளதாகவும், அதில் விஜய் கலந்து கொள்ள உள்ளதால் விழாவில் பாதுகாப்பு கேட்ட லியோ படத்தின் தயாரிப்பாளர் லலித்குமார் பெரியமேடு காவல்நிலையத்திற்கு கடிதம் எழுதியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கடைசி நேரத்தில் லியோ ஆடியோ வெளியிட்டு விழா ரத்து செய்யப்பட்டதால், படத்தின் வெற்றி விழா கொண்டாட போலீசாரிடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. லியோ படத்தின் வெற்றி விழா நடைபெறும் என்ற தகவலால் விஜய்யின் குட்டி ஸ்டோரி கேட்க ரசிகர்கள் உற்சாகமடைந்து வருகின்றனர்.


