
திருச்சி மாவட்டம் ஏலூர்பட்டி கிராமத்தில் சாலையின் குறுக்கே பாதை அமைத்துத் தர வலியுறுத்திப் பொதுமக்கள் சாலை மறியல் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.இதனால் திருச்சி – நாமக்கல் சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.
திருச்சி மாவட்டம், தொட்டியம் அடுத்த ஏலூர்பட்டியில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி அமைந்துள்ளது. திருச்சி – நாமக்கல் சாலையின் அருகே பள்ளி அமைந்துள்ள நிலையில் அண்மையில் நான்கு வழி அகல பாதையாக நெடுஞ்சாலை துறையினரால் அமைக்கப்பட்டது. இந்தச் சாலை நடுவே சென்டர்மீடியன் அமைக்கப்பட்டுள்ளது.
தற்போது பள்ளிக்குச் செல்லும் மாணவ மாணவிகள் பெற்றோர்கள் சென்டர் மீடியன் தடுப்பிலிருந்து நீண்ட தூரம் சென்று மீண்டும் பள்ளிக்கு வரும் சூழல் உள்ளது. எனவே பள்ளி அருகே சென்டர் மீடியன் குறுக்கே பாதை ஏற்படுத்தியும், அதன் அருகில் வேகத்தடை அமைக்க வேண்டும் என வலியுறுத்தி ஏலூர்பட்டியை சேர்ந்த பொதுமக்கள் திருச்சி – நாமக்கல் சாலையில் ஏலுர்பட்டியில் திடீர் மறியல் செய்தனர்.
இதனால் அங்குப் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த முசிறி கோட்டாட்சியர் ராஜன், தொட்டியம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்தையன் மற்றும் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரச பேச்சு வார்த்தை மேற்கொண்டு பொதுமக்களின் கோரிக்கைகுறித்து சம்பந்தப்பட்ட துறைமூலம் பேசி ஏற்பாடு செய்து தரப்படும் எனக் கூறியதையடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் திருச்சி – நாமக்கல் சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.

