
விவசாயி ஒருவர் சினிமா பாணியில் பூமிக்கு அடியில் 11 அறைகள் கொண்ட பாதாள வீட்டைக் கட்டி அதில் குடியேறியுள்ளார்…
உத்தரபிரதேச மாநிலம் ஹர்தோய் பகுதியைச் சேர்ந்தவர் இர்பான். விவசாயியான இவர் கடந்த 2010-ம் ஆண்டுவரை குடும்பத்துடன் வாழ்ந்து வந்தார்.
இந்நிலையில் அவரது தந்தை மரணத்திற்கு பிறகு அவரது வாழ்க்கையில் திருப்பம் ஏற்பட்டது. 2011-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்ட இவர் தோல்வி அடைந்தார். ஆனாலும் இவர் மனமுடைந்து போகவில்லை. மாறாகப் புதிதாக ஏதாவது செய்ய வேண்டும் எனக் கருதிய இவர் சினிமா பாணியில் பூமிக்கு அடியில் பாதாள வீட்டைக் கட்ட முடிவு செய்துள்ளார்.
அதன்படி தரிசாகக் கிடந்த நிலத்தில் பூமிக்கு அடியில் தனிநபராகக் கடந்த 11 ஆண்டுகளாக வீடு கட்டும் பணியில் ஈடுபட்ட இவர் ஒரு மசூதி, 11 அறைகள், படிக்கட்டுகள் மற்றும் கேலரி, ஒரு சித்திர அறையுடன் கூடிய பிரமாண்ட மாளிகையைக் கட்டியுள்ளார்.
இதன் சுவர்களில் பண்டைய கால வேலைபாடுகளையும் செதுக்கியுள்ளார். அவர் தனது வாழ்க்கையில் பெரும் பகுதியை இந்த மாளிகையிலேயே கழித்து வந்துள்ளார். இதுதொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.


