திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் மகனை கிண்டல் செய்யும் வகையில் பரிதாபங்கள் கோபி சுதாகர் வெளியிட்ட வீடியோவிற்கு திமுகவினர் எதிர்ப்புகளை பதிவு செய்து வருகிறார்கள். அந்த வகையில் திமுக ஆதரவாளர் வெளியிட்ட பதிவில், படித்த, பண்பான, அச்ச உணர்வில்லாத இளைஞர்களை கேலியாகவும், படிக்க வக்கிலாமல் கூத்தாடி பணம் ஈட்டும் புறம்போக்குகள் சாதனையாளராகவும் பார்கும் எந்த ஒரு சமூகமும் உருப்படாது. தமிழ் சமூகம் கூடிய விரைவில் சீரழிந்து போகப்போகிறது என்பது கண் கூடாக தெரிகிறது.
பரிதாபங்கள் சேனலின் இந்தச் செயல் மிகவும் வெட்கக்கேடானது என்று கூறியிருந்தார். இதனை டேக் செய்திருந்த திமுக முன்னாள் அமைச்சர் டிஆர்பி ராஜா, பரிதாபகங்கள் கோபி சுதாகருக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் அண்மையில் முதல்வர் விஜய் குறித்து மிரட்டல் விடுக்கும் வகையில் பேசிதற்காக கைது செய்யப்பட்டார்.
அவரது ஜாமீன் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இந்தசூழலில் தனது தந்தை கைது செய்யப்போட்ட போது மார்க்கண்டேயன் மகன் அக்சய் தவெகவை விமர்சித்தும், கைது நடவடிக்கையை விமர்சித்தும் ஆவேசமாக பேசினார். இது அப்போது வைரலானது. ஆனால் பரிதாபங்கள் சேனலில் அக்சய்யின் வீடியோ கிண்டல் செய்யும் வகையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அவரது பேச்சை மாடுலேசன் செய்து கோபி சுதாகர் கிண்டல் செய்ததாகவும் கூறப்படுகிறது. இந்த சூழலில் தந்தையின் நிலையைக் கண்டு கலங்கும் ஒரு சிறுவனின் வேதனையைக் கேலிப்பொருளாக மாற்றுவது நாகரிகமல்ல; பரிதாபங்கள் குழுவின் இந்த செயல் தவறு என்று பரிதாபங்கள் கோபி சுதாகரை திமுகவினர் விமர்சித்து வருகிறார்கள்.
திமுக ஆதரவாளரான நெட்டிசன் வெளியிட்ட பதிவில் கூறுகையில், “அதிகார வர்க்கத்தின் வாலாட்டத்திற்கு வளைந்து கொடுப்பதும்… ஆட்சியாளர்களின் ஆணைக்கு ஏற்ப ஜால்தரா தட்டுவதும்… கலையா? இல்லை, அது கலைக்குச் செய்யும் துரோகமா? சமூக வலைத்தளங்களில் ‘பரிதாபங்கள்’ என்று பெயர் வைத்துக்கொண்டு, இன்று தமிழ்நாட்டின் சாமானிய மக்களின் உண்மையான பரிதாபங்களை எள்ளி நகையாடும் இழிநிலைக்கு இவர்கள் தள்ளப்பட்டு விட்டார்கள்! அன்று துணிச்சலோடு நகைச்சுவை பேசத் துணிந்தவர்கள்… இன்று ஆளுங்கட்சியின் அதிகாரப் பசிக்கு அஞ்சி, அவர்களின் அடக்குமுறைக்கு அடிபணிந்து, நீதியை நெறிமுறை தவற விட்டுவிட்டார்கள்!
பாதிக்கப்பட்ட ஒரு சிறுவனின் வேதனையும், அவன் குரலின் கதறலும்… அதிகாரத்தின் காலடியில் மிதித்துத் துவைக்கப்படும்போது, அதை ஏளனம் செய்து ‘வியூஸ்’ (Views) தேடும் கூட்டம் தான் இவர்களா? கலையும் கைக்கூலியாகலாமா?
நகைச்சுவை என்பது நலிந்தவன் குரலை நசுக்குவதற்கா? ஆட்சியின் நிழலில் அமர்ந்துகொண்டு ‘ஜால்ரா’ வாசிக்கும் உங்கள் அரசியல் கேலிக்கூத்துகளைத் தமிழ் சமூகம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது. அதிகாரத்தின் துதிபாடிகளாக மாறிப்போன உங்களுடைய இந்த ‘போலி நகைச்சுவை’ முகத்திரையைத் தமிழக மக்கள் விரைவில் கிழித்தெறிவார்கள்!” இவ்வாறு கூறியுள்ளார்.
இன்னொரு நெட்டிசன் வெளியிட்ட பதிவில், “அப்பாக்கு ஒண்ணுன்னா பையன் துடிப்பான், அதுதான் பாசம், அதுதான் அப்பாவுக்கு குடுக்குற மரியாதை.
அதை கிண்டல் பண்ற வீடியோவை தூக்கிட்டு வந்து போட்டா, அந்த அளவுதான் நீயும் உங்க அப்பாவுக்கு மரியாதை குடுக்குறன்னு அர்த்தம். சிபிராஜ், சாந்தனு & இந்தாளு முன்னேறாம இருக்க காரணமும் இதுதான்” இவ்வாறு கூறியுள்ளார். இந்த பதிவினை டிஆர்பி ராஜா ஷேர் செய்துள்ளார்.
திமுக முன்னாள் அமைச்சரான டிஆர்பி ராஜா வெளியிட்டுள்ள பதிவில், “தன் தந்தைக்கு எதிராக நடந்த சட்டவிரோதமான ஒரு செயலுக்குப் பிறகு, தனது வேதனையை வெளிப்படுத்த முயன்ற ஒரு சிறுவனை இலக்கு வைத்து பரிதாபங்கள்_ வீடியோ வெளியிட்டிருப்பதைப் பார்த்து மிகவும் அருவருப்படைக்கிறேன். திறமையான இந்தத் திறமைசாலிகளுக்கே நான் மிகப்பெரிய ரசிகனாக இருந்திருக்கிறேன்; ஆனால், ஒரு இளம் சிறுவன் தனது வேதனையான காலத்தில் இருக்கும்போது அவனை வைத்துக் கேலி செய்திருப்பதைப் பார்த்து வெறும் அருவருப்பே மிஞ்சுகிறது.சோகமான வீழ்ச்சி… இதை அவர்கள் சரிசெய்வார்கள் என்று நம்புகிறேன்.” இவ்வாறு கூறியுள்ளார்.


