
செய்துங்கநல்லூர்:
நெல்லையிலிருந்து திருச்செந்தூருக்கு பயணிகள் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.
இன்று காலை 7.50 மணிக்கு ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள தாதன்குளம் ரெயில் நிலையம் வழியாகத் திருச்செந்தூர் நோக்கிப் பயணிகள் ரெயில் சென்று கொண்டிருந்தது.
ஆனால் தாதன்குளத்தில் நின்று செல்ல வேண்டிய இந்த ரெயில் நிற்காமல் சென்றது. இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து சுதாரித்துக் கொண்ட ரெயில் என்ஜின் டிரைவர் ரெயிலை பின்னோக்கி கொண்டு சென்றார். இதனால் ரெயில் மீண்டும் தாதன்குளம் ரெயில் நிலையத்துக்குச் சென்றது. இதை அங்கிருந்த பயணிகள் செல்போனில் வீடியோ எடுத்தனர்.
ஏற்கனவே 6 மாதங்களுக்கு முன்பு திருச்செந்தூரிலிருந்து சென்ற பாலக்காடு ரெயில் கச்சானாவிளை ரெயில் நிலையத்தில் நிற்காமல் சென்ற காரணத்தினால் மீண்டும் பின்னோக்கி வந்தது. இந்தக் காட்சிகளில் அடிப்படையில் அந்த ரெயில் மதுரை செல்லும்போது உடனடியாக என்ஜின் டிரைவர் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.
இந்நிலையில் இன்று தாதன்குளம் ரெயில் நிலையத்தில் பின்னோக்கி வந்த காட்சிகள் சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில் பின்னோக்கி இயக்கப்பட்ட பயணிகள் ரெயிலின் என்ஜின் டிரைவர் ‘சஸ்பெண்டு’ செய்யப்பட்டுள்ளார்.



