Toll gate:25 சுங்கச்சாவடிகளில் 1-ந் தேதி முதல் கட்டணம் உயர்வு!

Advertisements

தமிழ்நாடு முழுவதும் உள்ள 25 சுங்கச்சாவடிகளில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பயனீட்டாளர் கட்டணத்தை உயர்த்த உள்ளதால், தேசிய நெடுஞ்சாலைகளில் பயணம் செய்வது செப்டம்பர் 1-ந் தேதி முதல் விலை அதிகரிக்க உள்ளது.

வாகனத்தின் வகையைப் பொறுத்து ஒரு பயணத்திற்கான கட்டணம் ரூ.5 முதல் ரூ.150 வரை உயரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகளின் கூறியதாவது:-

சலுகை ஒப்பந்தத்தின்படி கட்டண உயர்வு ஆண்டுதோறும் அமலுக்கு வருகிறது. தேசிய நெடுஞ்சாலைகள் கட்டணம் (விகிதங்கள் மற்றும் வசூல் நிர்ணயம்) விதிகள், 2008-ன் படி மொத்த விற்பனை விலைக் குறியீட்டின் அடிப்படையில் சுங்கச்சாவடி கட்டணம் உயர்த்தப்பட்டது.

தற்போது மாநிலத்தில் 67 செயல்பாட்டு சுங்கச்சாவடிகள் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் சார்பில் அமைக்கப்பட்டுள்ளன.

அவற்றில் 25 சுங்கச்சாவடிகளில் மட்டும் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் 1 -ந் தேதி பயனர் கட்டணம் மாற்றியமைக்கப்படுகிறது.

அதன்படி, அனைத்து வகை வாகனங்களுக்கும் சுங்கச்சாவடிகளில் 5 முதல் 7 சதவீதம் வரை இந்த உயர்வு இருக்கும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

தமிழ்நாட்டில் உள்ள சுங்கச்சாவடிகள் மூலம் 2023- 2024-ல் ரூ.4,221 கோடி வசூலித்துள்ளது. இது 2022- 23ல் வசூலான ரூ.3,817 கோடியை விட 10 சதவீதம் அதிகம்.

மாநில வாரியாக வசூலிக்கப்பட்ட கட்டணங்களில் தமிழ்நாடு 5வது இடத்தில் உள்ளது. உத்தரபிரதேசம் வசூலில் நாட்டிலேயே முதலிடத்தில் உள்ளது.

6,961 கோடி, ராஜஸ்தான் ரூ.5,954 கோடி, மகாராஷ்டிரா ரூ.5,352 கோடி மற்றும் குஜராத் ரூ. 4,781 கோடி வசூலிக்கப்பட்டது.

தமிழகத்தில் எல் அண்ட் டி கிருஷ்ணகிரி தோப்பூர் சுங்கச்சாவடியில் அதிகபட்சமாக ரூ.269 கோடி வசூலித்து உள்ளது. கிருஷ்ணகிரி சுங்கச் சாவடியில் ரூ.257 கோடி வசூலித்து 2-வது இடத்தில் உள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *