Mallikarjun Kharge:புதிய ஓய்வூதிய திட்டம்: யு டர்ன் அடிக்கும் மோடி அரசு என காங்கிரஸ் கிண்டல்!

புதுடெல்லி:பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நேற்று மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

மத்திய அரசு ஊழியராக குறைந்தபட்சம் 10 ஆண்டு பணியாற்றியவர்கள் ஓய்வூதியத்திற்கு தகுதிபெறுவர். 10 ஆண்டு பணியாற்றிய ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.10,000 வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மத்திய அரசை சாடியுள்ளார்.

இதுதொடர்பாக, கார்கே எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட செய்தியில், ஒருங்கிணைந்த பென்சன் திட்டத்தில் இருக்கும் ‘யு’ என்பது மோடி அரசின் பல ‘யு டர்ன்’களைக் குறிப்பிடுகிறது. பிரதமர் மோடியின் ஆட்சியிடம் இருந்து 140 கோடி இந்தியர்களைப் பாதுகாப்போம்.

இன்டெக்சேசன் தொடர்பான பட்ஜெட் அறிவிப்பு, வக்பு மசோதாவை கூட்டுக்குழு ஆய்வுக்கு அனுப்பியது, ஒலிபரப்பு மசோதா வாபஸ், லேட்ரல் என்ட்ரி வாபஸ், தற்போது ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் என அடுத்தடுத்து மத்திய அரசு தன் முடிவுகளில் இருந்து பின்வாங்கி வருகிறது.

கடந்த ஜூன் மாதம் 4-ம் தேதியன்று வெளியான முடிவுகள் மத்திய அரசின் அதிகாரத்தை வென்றுவிட்டன என பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *