
டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாட்கள் சுற்றுப்பயணமாக நேற்று மாலை சேலம் மாவட்டத்துக்கு வந்தார். அவருக்கு ஈரோடு- சேலம் மாவட்ட எல்லையான பெரும்பள்ளத்தில் தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அங்கிருந்து சுமார் 11 கிலோமீட்டர் தூரம் ரோடு ஷோ சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு மேட்டூரில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில் இன்று காலை டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். தண்ணீரை திறந்து வைத்த முதலமைச்சர், காவிரி ஆற்றில் பூக்களை தூவினார். முதற்கட்டமாக 3,000 கன அடி நீர் திறக்கப்பட்டு, படிப்படியாக 12,000 கன அடியாக உயர்த்தப்படும். மேட்டூர் அணையின் 92 ஆண்டு கால வரலாற்றில், உரிய காலத்தில், டெல்டா பாசனத்துக்கு நீர் திறக்கப்படுவது இது 20-வது முறையாகும்.


