
அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு!
சென்னை: சட்டப்பேரவையிலிருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இஸ்லாமிய கைதிகள் விடுதலை தொடர்பாக முதலமைச்சர், எடப்பாடி இடையே காரசார விவாதம் ஏற்பட்டதால் அதிமுக வெளிநடப்பு செய்தது. இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்வது தொடர்பாக ஆளுநரைச் சந்தித்து அழுத்தம் தர அதிமுக தயாரா?, இஸ்லாமிய கைதிகள்மீது அதிமுகவின் திடீர் பாசத்திற்கு காரணம் என்ன? என்று முதலமைச்சர் கேள்வி எழுப்பி இருந்தார்.இதையடுத்து காரசார விவாதம் ஏற்பட்டதால் அதிமுக வெளிநடப்பு செய்தது.
முன்னதாகப் பட்டாசு ஆலை வெடி விபத்து தொடர்பாகச் சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தார்.
அரியலூர், தர்மபுரி பட்டாசு ஆலைகள் வெடி விபத்துகுறித்து கவன ஈர்ப்பு கொண்டுவந்தார். அப்போது பேசிய அவர், பாதுகாப்பு குறைபாடுகள் காரணமாக விபத்து ஏற்பட்டுள்ளது. இறந்தவர்கள் ஏழை எளிய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.
நிவாரணத் தொகையை ரூ.3 லட்சத்திலிருந்து ரூ.10 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார். பட்டாசு ஆலைகளில் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அப்போது இந்த அரிய வகை யோசனைகளை எல்லாம் கடந்த ஆட்சியிலேயே செய்திருக்கலாமேயென அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
மேலும் இது போன்ற விபத்துகளைத் தடுக்க நிரந்தர தீர்வு காணும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பாமக எம்.எல்.ஏ அருள் கேட்டுக்கொண்டுள்ளார். நிவாரண தொகையை உயர்த்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


