
17 வயது சிறுவனை இன்ஸ்டாவில் காதலித்த 15 வயது சிறுமி தாயின் நகைகளுடன் வீட்டை விட்டு வெளியேறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பூரை சேர்ந்த 15 வயது சிறுமி மற்றும் 17 சிறுவனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தப் பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே காதலாக மாறியுள்ளது. இந்நிலையில் 17 வயது சிறுவன் தன்னிடம் சிறிய அளவிலான செல்போன் தான் உள்ளதால் ஐபோன் வாங்கி தரும்படி சிறுமியிடம் கேட்டுள்ளார். இதனையடுத்து அந்தச் சிறுமி வீட்டிலிருந்த தனது தாயின் 7 சவரன் நகையை எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
பின்னர் அந்த நகையை விற்று அதில் கிடைத்த பணத்தின் மூலம் இருவரும் ஐபோன் வாங்கியுள்ளனர். இருவரும் திருப்பூரில் பல்வேறு இடங்களில் சுற்றியுள்ளனர். இதனிடையே வீட்டில் இருந்த நகை மற்றும் மகளைக் காணவில்லை என்பதால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரை அடுத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
பின்னர் சிறுமியையும் சிறுவனையும் போலீசார் கண்டுபிடித்தனர். இருவரிடமிருந்து செல்போன் மற்றும் பணத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் திருப்பூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

