
தென்மாவட்டங்களில் வரலாறு காணாத கனமழை பெய்து வருகிறது.
தூத்துக்குடி: குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தென்மாவட்டங்களில் வரலாறு காணாத மழை பெய்து வருகிறது. திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் அதிகனமழை வெளுத்து வாங்கி வருகிறது.
இந்நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் 93.2 செ.மீட்டர் அதிகனமழை பெய்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக திருச்செந்தூரில் 67.9 செ.மீ மழை பெய்துள்ளது. ஸ்ரீவைகுண்டத்தில் 61.8 செ.மீ மழை பெய்துள்ளது. கனமழை காரணமாக தென்மாவட்டங்களுக்கு செல்லும் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
தூத்துக்குடி மாவட்டத்தின் தூத்துக்குடி மாநகர், ஆத்தூர், ஏரல், திருச்செந்தூர், காயல்பட்டினம், உடன்குடி, ஆறுமுகநேரி, குலசேகரபட்டினம், ஸ்பிக் நகர் உள்பட பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. அதேபோல், திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களிலும் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. கனமழையால் பொதுமக்கள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளனர்.
அதன்படி, நெல்லை – சென்னை இடையே இருமார்க்கங்களிலும் வந்தே பாரத் ரெயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. திருச்செந்தூர் – பாலக்காடு, நெல்லை – ஜாம் நகர் ரெயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
நிஜாமுதீன் – கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில், முத்துநகர் விரைவு ரெயில், கோவில்பட்டி ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளன.

